தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.
ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமா? 2020ம் ஆண்டுக்குப் பின்னரும் இது தொடருமா?
- பிரபு, பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி, சிவகாசி
- பத்மபிரியா, வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
- சிவக்குமார், சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி, திருமயம்
குறிப்பிட்ட சமுதாய மக்கள் வழிவழியாக வாய்ப்பு இழந்துள்ளனர். அவர்களுக்காக அரசியல் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை நிறைவேற்றுவது நமது சமுதாய கடமை. 2020ம் ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் பெருகிவிடும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் படிக்க விரும்பும் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் திறமைக்கும் மதிப்பு இருக்கும்.
சமுதாய ஒழுக்கம், லஞ்ச ஊழல் ஒழிப்பு, தனிநபர் சுகாதாரம் இவற்றைப் பேண மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அவசியமா?
- ஜேசுதாஸ், தேனாம்பேட்டை, சென்னை
ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகளை நல்ல ஆசிரியர்கள் கற்றுத் தந்தாலே மாணவர்களுக்கு நல்ல குணங்கள் வந்துவிடும்.
சூரிய ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்கிறோமா?
-ஆனந்தவேலு, அரசு இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
சூரிய சக்தி மிகுதியாக இருக்கிறது. கூடுதல் சக்தியை சேமிக்கும் சூரிய கலன்களை நாம் தயாரித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நேனோ டெக்னாலஜி இதற்கு பெரும்பங்கு வகிக்கும். கார்பன் நேனோ டியூப் சூரிய கலன்களின் சக்தியை அதிகரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.