தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்.
இந்த வயதில் எனக்கு ஏற்படும் மனச்சிதறல்களிலிருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
- சிவா, டி.ஐ., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரப்பாக்கம், சென்னை
மனச்சிதறல்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமே. மாணவப் பருவம் பொறுப்புள்ளது என்பதால் நம் பலம் மற்றும் ஆர்வத்தை அறிந்து கொள்ள வேண்டும். உங்களது லட்சியத்தை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக நீங்கள் தொடர்ந்து போராடுங்கள். இந்த லட்சியத்தை அடையும் போது நீங்கள் கண்டிப்பாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து உங்கள் லட்சியத்தில் நீங்கள் வெற்றி பெறுங்கள்.
நர்சிங் துறை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நர்சிங் மிகச்சிறந்த உன்னதமான பணி. இரவிலும் பகலிலும் வேதனையுறுவோருக்கு தேவையானதை செய்யும் பணி என்பதால் ஆஸ்பத்திரி வார்டுகளில் அவர்கள் தேவதை போல் காட்சியளிப்பார்கள். இந்த பணியில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உலகம் முழுவதும் இப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்திய நர்ஸ்கள் எங்கு போய் பணியாற்றினாலும் அவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு.
இந்தியாவில் ஏராளமான தோரியம் தாது உள்ளது. ஆனால் அணு உலைகளுக்கு எரிபொருளுக்கு அடுத்த நாடுகளை நம்பியிருக்கிறோமே?
- பிரதீப் குமார், 12ம் வகுப்பு, பி.வி.எம்., பள்ளி, பொள்ளாச்சி
இன்னும் சில ஆண்டுகளில் நமது விஞ்ஞானிகள் இதில் வெற்றி கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.