தொலைநிலை கல்வி அமைப்புமார்ச் 03,2019,22:50 IST
திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வி நிறுவனங்கள் மற்றும் தொலைநிலைக் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கோடு இந்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பே, ‘டிஸ்டன்ஸ் எஜூகேஷன் பியூரோ’.
அறிமுகம்:
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக சட்டம் 1985-ன்படி, புதுடெல்லியில் தொலைநிலை கல்விக் கழகம் (டிஸ்டன்ஸ் எஜூகேஷன் கவுன்சில்) என்கிற பெயரில் அமைக்கப்பட்டது. தொலைநிலை கல்வியின் தரநிலையை நிர்ணயிப்பது இந்த கழகத்தின் முக்கிய பணியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.,) கட்டுப்பாட்டின் கீழ் 2013ம் ஆண்டு இந்த கழகம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு, ‘டிஸ்டன்ஸ் எஜூகேஷன் கவுன்சில்’, ‘டிஸ்டன்ஸ் எஜூகேஷன் பியூரோ’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டிலுள்ள தொலைநிலைக் கல்வியை வரமுறைப்படுத்துவது, கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, கண்காணிப்பது, தொலைநிலைக் கல்வி முறையை மேம்படுத்துவது என பல்வேறு பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுவருகிறது.
தொலைநிலை கல்வியின் முக்கியத்துவம்:
பல்வேறு சூழ்நிலைகள் காரணமாகக் கல்லூரிகளில், உயர்கல்வியைப் பயில முடியாத அல்லது தொடரமுடியாமல் போன மாணவர்களது கல்வி கனவைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு தொலைநிலைக் கல்வி. அந்த வகையில் அறிவுசார் சமுதாயத்திற்கான ஒரு அவசியத் தேவையாக இது அமைகிறது.
பெண்கள், கிராமப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த கல்வி முறை ஒரு வரப்பிரசாதம்.
கல்லூரிக்கு செல்லாமலே சில வழிகாட்டுதல்களின் மூலம் பல்கலைக்கழக தரத்திலான கல்வியையும், அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழையும் மாணவர்கள் பெற இது உதவுகிறது.
வகைகள்:
சீனாவைத் தொடர்ந்து உலகிலேயே மிகப்பெரிய தொலைநிலை கல்வி அமைப்பைக் கொண்டுள்ள நாடு இந்தியா. இந்தியாவில் ஆறு வகையான கல்வி நிறுவனங்களின் வாயிலாக இம்முறை கல்வி வழங்கப்படுகிறது.
தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்
மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம்
தொலைநிலை கல்வி இயக்ககங்கள் / நிறுவனங்கள்
படிப்புகள்:
இளநிலை, முதுநிலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா, அட்வான்ஸ்டு டிப்ளமா, எம்.பில்., சான்றிதழ் மற்றும் ஆன்லைன் படிப்புகள் என பல்வேறு நிலையில், தொலைநிலை கல்வி நாடு முழுவதும் வழங்கப்படுகிறது.
குறிப்பு: தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தொலைநிலைக் கல்வி அமைப்பு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் படிப்புகள் குறித்த பட்டியல் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.