ஐ.சி.எப்.ஆர்.இ., | Kalvimalar - News

ஐ.சி.எப்.ஆர்.இ., ஏப்ரல் 15,2019,10:14 IST

எழுத்தின் அளவு :

வனங்கள், வன விலங்குகளின் வாழ்வியல் முறை மற்றும் பல்லுயிர்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அவை சார்ந்த படிப்புகளை வழங்கவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பே ‘இந்தியன் கவுன்சில் ஆப் பாரஸ்ட்ரி ரிசர்ச் அண்ட் எஜூகேஷன்’.



முக்கியத்துவம்:


மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக 1986ம் ஆண்டு இந்தியன் கவுன்சில் ஆப் பாரஸ்ட்ரி ரிசர்ச் அண்ட் எஜூகேஷன் (ஐ.சி.எப்.ஆர்.இ.,) நிறுவப்பட்டது. வனவியல் சார்ந்த ஆய்வுகளின் வாயிலாக துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழி வகுக்கவும், வனவியல் படிப்புகளை முறைப்படுத்துவதுமே இந்த கழகத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.



ஐ.சி.எப்.ஆர்.இ., அமைப்பின் கீழ் 9 ஆராய்ச்சி நிறுவனங்களும், வெவ்வேறு உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக 5 மேம்பட்ட ஆராய்ச்சி மையங்களும் இயங்கி வருகின்றன. இது டேராடூனில் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஜோதாபூர், சிம்லா, ஐதராபாத், கோயம்பத்தூர், பெங்களூரு என நாட்டின் பல இடங்களில் செயல்படும் வனவியல் சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஐ.சி.எப்.ஆர்.இ., கீழ் செயல்பட்டு வருகிறது.



முக்கிய வனவியல் பிரிவு ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள்:


 பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன்


 டிராப்பிக்கல் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஜபல்பூர்


 அரிட் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஜோத்பூர்


 ஹிமாலயன் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சிம்லா


 இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் பயோடைவர்சிட்டி, ஹைதிராபாத்


 இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனடிக்ஸ் அண்ட் டிரீ பிரீடிங், கோயம்பத்தூர்


 ரெயின் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், அசாம்


 இன்ஸ்டிடியூட் ஆப் வுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, பெங்களூரு


 பாரஸ்ட் ரிசர்ச் சென்டர் பார் பாம்பூ அண்ட் ரட்டன், மிசோரம்


 பாரஸ்ட் ரிசர்ச் சென்டர் பார் இகோ - ரிகாபிலேஷன், அலகாபாத்



பயிற்சிகள்:


ஒவ்வொரு பிரிவு ஆராய்ச்சி மையங்களிலும் பலதரப்பட்ட வனவியல் சார்ந்த ஆராய்ச்சி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வனங்களை பராமரிப்பது, அதன் வளங்களை பாதுகாப்பது ஆகிய முக்கிய பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன. இவை குறுகிய கால பயிற்சி படிப்புகள் ஆகும்.



கல்வி இயக்ககம்:


ஐ.சி.எப்.ஆர்.இ., அமைப்பின் முக்கிய இயக்கங்களுள் ஒன்று ‘டைரக்ட்ரேட் ஆப் எஜூகேஷன்’. பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் தரமான வனவியல் கல்வியை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இதன் பணி. மேலும் காடுகள், வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான நிதியுதவிகளை தகுதியானவர்களுக்கு வழங்குவதும் இதன் கடமையாகும். மாநில பல்கலைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கான ‘கிரான்ட்-இன்-எய்ட்’ போன்ற உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.



வாய்ப்புகள்:


வனவியல் துறை பட்டதாரிகள், ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வனத்துறை பணியாளராக வேலை வாய்ப்பினை பெறலாம். அதுமட்டுமின்றி பல்வேறு வனம் சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், எஸ்டேட்டுகள், ஆராய்ச்சி மையங்களிலும் இவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு தகுதியான வல்லுநர்களை உருவாக்குவதே ஐ.சி.எப்.ஆர்.இ., கழகத்தின் நோக்கம்.



விபரங்களுக்கு: http://icfre.gov.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us