தேனி மாவட்டம், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியை சேர்ந்த செல்வராஜ்- இந்துமதி தம்பதியின் மகன் தளபதி குமார விக்ரம் (17). திருச்செங்கோடு வித்யா விகாஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர் பிளஸ் 2 தேர்வில், ஆயிரத்து 181 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
மாணவர் தளபதி குமார விக்ரம் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ‘டிவி’ பார்ப்பதை நிறுத்தி விட்டு தேர்வில் கவனம் செலுத்த தொடங்கினேன். சத்தான உடலுக்கு தேவையான உணவு முறைகளிலும் கவனமாக இருந்து வருகிறேன். பத்தாம் வகுப்பில் ஆயிரத்து 100க்கு ஆயிரத்து 60 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன். 7 மதிப்பெண்களில் மாநில ரேங்க் கிடைக்கவில்லை.
இதனால் பிளஸ் 2 தேர்வில் மாநில முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தேன். பிளஸ் 1 வகுப்பு தொடக்கத்தில் இருந்தே இதற்கு தயாராகி விட்டேன். எனது கவனம் முழுக்க படிப்பில் இருந்ததால் வெற்றி கிடைத்துள்ளது. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இவ்வாறு விக்ரம் தெரிவித்தார்.