கேபிடல் மார்க்கெட் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? நவம்பர் 18,2010,00:00 IST
செக்யூரிட்டிகளை வாங்குவது விற்பது போன்ற பணிகளைக் கொண்டது கேபிடல் மார்க்கெட். நிறுவனங்களும் அரசும் இதன் மூலமாக தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தைப் பெறுகின்றன. இதிலும் பிரைமரி மற்றும் செகண்டரி மார்க்கெட் எனப்படும் 2 பிரிவுகள் உள்ளன. பப்ளிக் லிமிடட் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் புதிதாக மூலதன பத்திரங்களை வெளியிடுவதற்குப் பெயர் பிரைமரி மார்க்கெட். பின் இவை வாங்கப்படுவதும் விற்கப்படுவதுமாக செயல்படும் இடத்திற்கு செகண்டரி மார்க்கெட் என அழைக்கப்படுகிறது.
இதில் வாங்குபவர்கள் மற்று விற்பவர்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் நிதி மேலாண்மை அதிகாரிகள் ஆகியோர் பணி புரிகிறார்கள். ஈக்விட்டிகள், பாண்டுகள், அன்னிய செலாவணிகள் ஆகியவற்றில் வாணிபம் செய்யும் முதலீட்டு வங்கிகள், கமர்ஷியல் வங்கிகள் மற்றும் பெரிய அளவிலான நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எப்போதும் இது தொடர்பான திறன்களைப் பெற்றிருப்போர் தேவைப்படுகிறார்கள். மார்க்கெட் போக்கு, நிதி உபகரணங்கள், உளவியல் ஆகியவற்றில் சிறப்பான திறன்களைப் பெற்றிருப்போர் தான் இது போன்ற கேபிடல் மார்க்கெட் பணிகளுக்குத் தேவைப்படுகிறார்கள்.
காமர்ஸ், அக்கவுண்டன்சி, சி.ஏ., காஸ்ட் அக்கவுண்டன்சி, பொருளாதாரம், நிதி, மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்திருப்போருக்கு இத் துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. செக்யூரிடிஸ் மார்க்கெட் துறையிலேயே சிறப்பு பட்ட மேற்படிப்பும் தரப்படுகிறது. கேபிடல் மார்க்கெட்டில் எம்.பி.ஏ., வெல்த் மேனேஜ்மெண்ட், பைனான்சியல் இன்ஜினியரிங், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் இவற்றில் சிறப்பு டிப்ளமோ தகுதி பெற்றிருப்பவரும் இன்று இத் துறையில் வளமான வாய்ப்புகளைப் பெறலாம்.