அனிமேஷன் துறையில் வேலை வாய்ப்புகளை பொறுத்த வரை நல்ல எதிர்காலம் உள்ளது என்று பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் பேசினார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலஷ்மி மகாலில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக நடந்த கருத்தரங்கில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் டிசைனிங் துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் பேசியதாவது: சாதாரணமாக நாம் அனைவரும் பென்சிலை வைத்து ஓவியம் வரைவோம். ஆனால் கம்ப்யூட்டர் மூலம் வரையும் தொழில்நுட்பம் தான் அனிமேஷன்.
அனிமேஷனில் போட்டோ ஷாப் முக்கியத்துவம் வாய்ந்தது. இதிலிருந்துதான் கட்-அவுட்டுகள் தயாரிப்பது, பேனர்கள், போஸ்டர்கள் தயாரிக்கும் முறை உள்ளது. இதே போல் பேஜ் மேக்கர், இன்-டிசைன், 3 டி டைமென்ஷன், 3 டி அனிமேஷன் என பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளது. குறிப்பாக 3டி அனிமேஷன் தொழில்நுட்பம் வீடுகளை டிசைன் செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கட்டடக் கலையில் புதிய வகை டிசைன்களை கொண்டு வருவதில் 3 டி அனிமேஷன் அதிக அளவு பயன்படுகிறது.
அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்புகளை பொறுத்த வரை நல்ல எதிர்காலம் உள்ளது. பத்திரிகை துறை, சினிமாத்துறை, பொறியியல் துறை, தொழில்துறை, விளம்பரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல துறைகளில் அதிக அளவு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரும்.
மற்ற துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவு போட்டி இருக்கும். ஆனால் அனிமேஷன் துறையில் போட்டி குறைவாக உள்ளதால் கூடுதல் வேலை வாய்ப்புகளுக்கு, வாய்ப்பு உள்ளது. அனிமேஷன் படித்தவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிகம் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றது. இவ்வாறு உன்னிகிருஷ்ணன் பேசினார்.