11, 12 ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் பார்க்க வேண்டும்: சதீஷ் | Kalvimalar - News

11, 12 ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் பார்க்க வேண்டும்: சதீஷ்

எழுத்தின் அளவு :

தொழிற்கல்வி படிப்புகளில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, 11 மற்றும் 12ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என்று கல்வியாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வி முறையில் தமிழக அரசு செய்ய உத்தேசித்துள்ள புதிய மாற்றங்கள் குறித்து, பிரபல கல்வியாளரும், ஆர்.எம்.கே. கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வருமான திரு.சதீஷ் அவர்கள் கல்விமலருக்கு அளித்தப் பேட்டி:

* தமிழக அரசின் இந்தப் புதிய செயல்திட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ப: நிச்சயமாக வரவேற்கிறேன். ஏனெனில், இதன்மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். புத்தக மூட்டையை சுமக்க வேண்டியதில்லை. வருட இறுதியில் நடத்தப்படும் ஒரே தேர்வின் மூலமாக ஒரு மாணவனின் திறமையை மதிப்பிடுவதென்பது தவறு. எனவே, இதுபோன்ற பருவரீதியிலான மதிப்பீடுகளின் மூலமே ஒரு மாணவர் சரியான அங்கீகாரத்தைப் பெறுவார். வாழ்க்கைத் திறன்கள் மற்றும் எழுத்துத் தேர்வு என்ற இந்த 2 முறைகள் சிறப்பானவை.

இதன்மூலம் ஒரு பருவத்தில் படித்தப் பாடங்களை அடுத்த பருவத்திற்கும் மாணவர்கள் சுமக்கும் அவலம் கிடையாது. ஒரேயொரு இறுதித்தேர்வில் 1 மதிப்பெண் அதிகம் பெற்ற ஒரு மாணவரை, மாநிலத்தில் முதலாவது இடம் பிடித்தார் என்று அங்கீகரிப்பது மிகவும் தவறான நடைமுறை. ஏனெனில், பலரால், திறமையிருந்தும், ஏதோ சில காரணங்களுக்காக இறுதித்தேர்வில் சிறப்பாக செயல்பட முடியாமல் போயிருக்கலாம்.

தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவத்தேர்வுகள் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் ஒரு கல்வியாளர் என்ற முறையில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு 2 பருவங்களே போதுமானது என்பது எனது கருத்து. அதேசமயத்தில், 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பெற்ற கிரேடுகளின் அடிப்படையில், மேல்நிலைப் படிப்பில், பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் போட்டி ஏற்படுவதைத் தவிர்க்க, மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி மேல்நிலைப் படிப்பில் எத்தகைய முறைகளைக் கடைபிடிக்கலாம்?

ப:  11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள பருவத்தேர்வுகள் முறை சிறப்பானது. அதேசமயம், வாழ்க்கைத் திறன்களுக்காக வழங்கப்படும் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், அதன்மூலம் தொழிற்கல்வியில் இடங்களைப் பெறுவதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டுவிடும்.

மாறாக, 11ம் வகுப்பிற்கும், 12ம் வகுப்பிற்கும் தலா 2 அரசு பருவத்தேர்வுகளை நடத்தி, அதில் பெறும் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் இடங்களை வழங்கலாம். வாழ்க்கைத் திறன்களுக்காக மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, மாணவர்களுடைய சுருக்கவிபரத்தில்(Bio Date) சேர்த்துக்கொண்டு, எதிர்கால வேலை வாய்ப்புகள் மற்றும் இதர மேற்படிப்பு விஷயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனெனில், CBSE முறையில் 10ம் வகுப்புவரை மட்டுமே இந்தமுறை உள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் 10ம் வகுப்பு வரையே இந்த வாழ்க்கைத் திறன் மதிப்பெண்கள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். அந்த மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

பள்ளி மேல்நிலைப் படிப்புகளை இதுபோன்ற ஒருங்கிணைந்த முறையில் கொண்டு வருவதன் மூலம், தேர்வுக்காக மட்டுமே பாடம் நடத்துவது தவிர்க்கப்படும். 11ம் வகுப்பு படிப்பை ஏதோ ஒன்றுக்கும் உதவாதது என்பதாக கருதும் நிலை நீங்கும்.

* இந்தப் புதிய கல்விமுறை தொடர்பாக ஆசிரியர்களுக்கு எந்தவிதமான பயிற்சிகள் தேவை?

ப:  இது மிகவும் முக்கியமான ஒரு கேள்வி. அரசு உத்தேசித்துள்ள இந்த சிறந்த நடைமுறைகளை வெற்றிகரமாக மாற்றுவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. தற்போதுள்ள ஆசிரியர் பயிற்சி முறைகளில் பல சிறந்த மாற்றங்களை அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும். இதன்மூலம் ஆசிரியர்களுக்கு சிறந்த திறன்கள் மற்றும் உளவியல் பாங்கு ஏற்படுவதை உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், வாழ்க்கைத் திறன்களுக்கான மதிப்பெண்களை வழங்குவதில், அவர்கள் தங்களின் இஷ்டத்திற்கு நடந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த விஷயத்தில் அவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துவிடக்கூடாது. கல்வி அதிகாரிகளின் கண்காணிப்போடு, பெற்றோர்களின் ஒத்துழைப்பும், கண்காணிப்பும்கூட அவசியம். இந்த மதிப்பெண்களை வழங்குவதற்கான சரியான வரைமுறைகளை உருவாக்க வேண்டும். முறையான ஆவணங்களை இதுதொடர்பாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இத்திட்டம் வெற்றியடைவதில் கல்வித்துறையின் சிறந்த செயல்பாடும், சரியான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பும் மிகவும் முக்கியம். இல்லையெனில், ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுவிடும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us