இந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம் | Kalvimalar - News

இந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம்மார்ச் 16,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனமானது, சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் கீழ் வரும் ஒரு தேசிய ஆய்வகமாகும். கடந்த 1960ம் ஆண்டு, தற்போது உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள டெஹ்ராடூனில் அமைக்கப்பட்டது.

ஹைட்ரோகார்பன் தொழில்துறையில், பல்வேறான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை இக்கல்வி நிறுவனம் செய்து வருகிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு, பெட்ரோகெமிக்கல்கள், கெமிக்கல் மற்றும் பெட்ரோல் பொருட்களின் பயன்பாடு ஆகியவை தொடர்பான 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை, தொழில்துறைக்கென, இக்கல்வி நிறுவனம் மேம்படுத்தி வழங்கியுள்ளது.

சுத்திகரிப்பு தொழில்துறை, பெட்ரோகெமிக்கல் பிளான்ட்ஸ், ஆட்டோமோடிவ் செக்டார், பவர் பிளான்ட்ஸ் மற்றும் இது தொடர்பான பிற தொழில்துறைகள் ஆகியவற்றில் பணிபுரியும் நபர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதில், இக்கல்வி நிறுவனம், முன்னணியில் உள்ளது.

ஆராய்ச்சிப் பிரிவுகள்

* Analytical sciences
* Automotive fuel and lubricant application division
* Bio fuels
* Catalytic conversion processes
* Chemical sciences
* Seperation processes
* Tribology & Combustion

போன்ற பிரிவுகளில், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயிற்சி

இந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம், உலகளாவிய அளவில், பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழில்துறைக்கு, முழுஅளவிலான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பயிற்சி சேவைகளை வழங்குகிறது. இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 7000க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பெட்ரோலிய தொழில்துறையினருக்கு பயிற்சி வழங்கியுள்ளது.

1960ம் ஆண்டுகளின் துவக்கத்தில், பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான இந்நிறுவனத்தின் முதன்மைப் படிப்பு தொடங்கியது. மேலும், உலகத்தரம் வாய்ந்த அளவில், அதிக எண்ணிக்கையிலான ரெகுலர் மற்றும் அட்வான்ஸ்டு படிப்புகளை, குறுகிய மற்றும் நீண்டகால அளவில் இக்கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. பயனாளரின் தேவைக்கேற்ப, இப்படிப்புகளின் தொழில்நுட்ப உள்ளடக்கம் மற்றும் காலகட்டம் போன்றவை வடிவமைக்கப்படும்.

இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி, பல சர்வதேச நிறுவனங்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் படிப்புகள், யூனிட் செயல்பாட்டு பொறியாளர்கள், யூனிட் தொழில்நுட்ப மேலாளர்கள், ஷிப்ட் பொறியாளர்கள், ரசாயண நிபுணர்கள், விற்பனைக் குழு மற்றும் ஆபரேட்டர்கள் ஆகியோர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்படுகிறது.

மேலும், இக்கல்வி நிறுவனத்தின் பயிற்சி படிப்புகள், நியாயமான கட்டணத்தில் வழங்கப்படுவதுடன், தேவைப்படும் அடிப்படை அறிவு மற்றும் திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன.

இங்கே வழங்கப்படும் படிப்புகளுக்கான ஆசிரியர்கள், நல்ல அனுபவமும், திறனும் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொறியியல் நிறுவனங்களிலிருந்து வரும் கெஸ்ட் லெக்சரர்கள் ஆகியோர்.

இண்டர்ன்ஷிப்

பி.இ., பி.டெக்., எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., போன்ற படிப்புகளை மேற்கொண்டு, தங்களின் பட்டங்களைப் பெற, கட்டாயம் ப்ராஜெக்ட்களை செய்ய வேண்டும் என்ற நிலையிலுள்ள மாணவர்களுக்கு, இந்நிறுவனத்தில், சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதன்மூலம், பெட்ரோலியம் தொடர்பான துறையில், தற்போது பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றிய அறிமுகமும், அனுபவமும் மாணவர்களுக்கு கிடைக்கிறது.

கோடைகால பயிற்சி மற்றும் ப்ராஜெக்ட் பணிகளை செய்வதற்கான நடைமுறை

இணையம் மூலமாக ஆன்லைனில் பதிவுசெய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். பயிற்சி தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்பாக, அவர்களின் கல்லுழரிகளுக்கு, வேண்டுகோள் வைப்பதற்கு, தகவல் தெரிவிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவமானது, பத்தாம் வகுப்பு தொடங்கி, அனைத்து கல்விச் சான்றுகளுடன், The Head, Training & HR, Indian Institute of Petroleum, Mohkampur, Dehradun 248005 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கல்லூரியின் ஸ்பான்சரிங் கடிதம், கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோரின் கையொப்பமில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ப்ராஜெக்ட் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் இதர பிற விபரங்களை அறிந்துகொள்ள http://www.iip.res.in/details.php?pgID=sb_59 என்ற வலைத்தளம் செல்க.

இந்நிறுவனம் வழங்கும் படிப்புகள்

பொறியியலில் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பு

அட்வான்ஸ்டு பெட்ரோலியம் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி(APST) என்ற பெயரில், பொறியியல் துறையில், முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை, இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது. இது 2 வருட படிப்பாகும். ஆண்டின், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இப்படிப்பு தொடங்குகிறது. இதுதொடர்பான அறிவிப்பு, ஆண்டின் எப்ரல் அல்லது மே மாதத்தில், தேசிய செய்தித்தாள்கள் மற்றும் இக்கல்வி நிறுவனத்தின் வலைதளம் ஆகியவற்றில் வெளியாகும். இப்படிப்பு, கடந்த 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

முனைவர் பட்டப் படிப்பு

இப்படிப்பிற்கு, நெட்(NET) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தொழில்நுட்ப இன்டர்வியூ செயல்பாட்டிற்கு பின்னர், கெமிக்கல் சயின்சஸ் பிரிவில் பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிப்பில், JRF முடித்தவர்களை சேர்க்கும் அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மற்றும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் முக்கிய செய்தித்தாள்களில் வெளியிடப்படும். இப்படிப்பு கடந்த 2011ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us