பெரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் சரவணன் பெரியசாமி அளித்த பேட்டி:
இன்றைய மாணவர்கள் உற்சாகத்தோடு கல்வி கற்க வேண்டும் என்றால் மாணவர்களின் திறன், வேலைவாய்ப்பு பெறும் நிலை போன்றவற்றோடு கற்கும் சூழல், பயணிக்கும் பேருந்து என அனைத்திலும் சிறந்த வசதிகளை அளிப்பது அவசியம்.
முதல் ஆண்டு படிக்க வரும் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் தடுமாற்றங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்து, தமிழ்வழியில் கல்வி கற்ற மாணவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், ஆங்கிலவழிக் கல்வி பயின்ற பிற மாணவர்களோடு போட்டியிடும் வகையிலும் சிறப்பான வகையில் தயார்படுத்துகிறோம்.
பொறியியல் மாணவர்கள் வெறும் மதிப்பெண்களோடு கல்லூரியை விட்டு செல்வதனால் எந்த பயனும் இல்லை. தனித்திறன்கள், வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான தன்னம்பிக்கை, மொழித்திறன், சவால்களை சமாளிக்கக்கூடிய திறன் போன்றவற்றோடு கல்லூரி வழ்க்கையை நிறைவு செய்ய வேண்டும்.
பொறியியல் கல்வியானது மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி பயணிக்கும் நிலையை மாற்றி, பிரச்சினைகளை தீர்க்கும் முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இருக்க வேண்டும். கேள்விக்குப் பதில் மட்டும் சொல்லக்கூடிய வகையில் இருக்கும் தேர்வு முறையினை மாற்றி, கேள்விக்கான தீர்வுகளை உருவாக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றங்கள் உருவாக்குவது பொறியியல் துறையில் மாணவர்கள் சாதிப்பதற்கு துணை புரியும்.
பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பது பெரும்பாலான கல்வியாளர்களின் கவலையாக இருக்கிறது. அந்த நிலையை மாற்றி விளையாட்டு, இசை, நடனம் போன்ற பயிற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதோடு, இந்த பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களால் கல்வியிலும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
பெற்றோர்கள், மாணவர்கள் தற்பொழுது கனிணி அறிவியல் படித்தால் வேலை கிடைக்காது என எண்ணும் இந்த காலக்கட்டத்தில், கனிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் படித்த மாணவர்களுக்கும் வளாகத்தேர்வின் மூலம் வேலைவாய்ப்பினை பெற்றுத் தருகிறோம். பிற கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்காக நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள்தான் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வழிவகுக்கும் என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில் மாணவர்கள் உலகளாவிய அறிவினை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அமெரிக்காவின் மோர்கன் மாநிலப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர் பரிமாற்ற திட்டம், ஆசிரியர் பரிமாற்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஓப்பந்தம் ஏற்படுத்தியுள்ளோம்.
ஆராய்ச்சித் துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் பொறியியல் கல்வியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதனால், ஆராய்ச்சித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்கள் தொழில் நிறுவனங்களோடு இணைந்து கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதற்கான செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.