பிரின்ஸ் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் கே. வாசுதேவன் அளித்த பேட்டி:
தற்போதுள்ள மாணவர்கள் அறிவுத்திறனுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். அவர்களின் திறனை விட குறைவான பாடத்திட்டங்களை அளிக்கும்போது மாணவரின் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பொறியியல் கல்வியைப் பொறுத்த வரையில் கணிதம் மிகவும் அடிப்படையானது. கணிதத்தில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் பொறியியலாளர்களுக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.
இதனை நன்கு உணர்ந்ததனால்தான், மாணவர்களுக்கு கனிணி நிறுவனங்களிலிருந்து பொறியாளர்களை வரவழைத்து பயிற்சி அளித்து, தற்போதுள்ள நிலவரங்களையும், தேவைகளையும் எளிதாக அறிந்துகொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களைய நிறுவனங்களுக்கே அழைத்துச் சென்று தொழிலக செயல்பாடுகளை கற்றுத் தருவதனால், வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் படிக்கும்பொழுதே தயாராகிறார்கள். கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தேர்ச்சி விகிதம் சிறப்பானதாக இருக்கிறது.
மேலும், கலை, அறிவியல் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த காலங்களை விட தற்போது அதிகமாகவே இருக்கிறது. கலை, அறிவியல் படிப்பதற்கான கல்விச்செலவு குறைவானதாக இருப்பதும், கணிதம் போன்ற கடினமான பாடங்கள் அதிக அளவில் இல்லாமல் இருப்பதோடு, படிப்பதும் எளிதானதாக இருப்பதால் மாணவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள். அதே போன்று கலை, அறிவியல் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.
இன்றைய நிலையில் பெரு நகரங்களில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கே மாணவர்கள் விரும்புகிறார்கள். உலகத்தோடு இணைந்து இயங்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். மேலும் பிளஸ் 2விலேயே மேற்படிப்புக்கு தயாராக வேண்டும். கல்வியின் தரம் உயரும்பொழுது மாணவர்களுக்கான எதிர்கால தேவைகளை கல்வி நிலையங்கள் வாயிலாக சிறப்பாக அளிக்க முடியும்.