டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் அளித்த பேட்டி:
தரமான கல்வியின் காரணமாக, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெறுகின்றனர். இன்றைய நிலையில், வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு வெளிநாட்டுக் கல்வியின் மேல் உள்ள மோகமும், அந்த கல்வியின் மூலம் கிடைக்கும் ஊதியமும் முக்கிய காரணமாகும். மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அனைவருக்கும் சமமான திறன்சார்ந்த கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவதனால் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், பல நாடுகளிலிருந்தும் வந்து மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
கல்வி சர்வதேச தரத்திற்கு இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு பாடத்திட்டங்கள் உலகளாவிய அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த சிறப்புப் பயிற்சிகள், விளையாட்டுப் பயிற்சிகள், தனித்திறன் வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்காக ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான உதவித்தொகைகள், தனியார் சேவை அமைப்புகளுடன் இணைந்து வழங்கப்படுகின்றது.
சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் நாட்டின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். சிறு நிறுவனங்களை அதிகம் உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்ற கொள்கையால்; படிக்கும் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு மட்டும் ஏற்ற வகையில் உருவாக்காமல், சுய தொழில் தொடங்கக்கூடிய வகையில் ஆர்வத்தையும், திறனையும் அளித்து சாதனையாளர்களாக உருவாக்குகிறோம்.
இந்தியா உலக நாடுகளோடு போட்டியிடும் நிலையில் இருந்தாலும், ஆராய்ச்சியில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். ஆராய்ச்சிகளுக்கான அடிப்படைகள் கல்வி நிலையங்களிலிருந்தே தொடங்கப்படவேண்டும். அதனால் தான் ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.
மேலும் மாணவர் சமுதாயம் உயர்வு பெற வேண்டும் என்றால் கல்வி நிறுவனங்களுடன் மத்திய, மாநில அரசாங்கங்கள் இணைந்து செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். நடைமுறை சார்ந்த பாடந்த்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் இல்லை. சர்வதேச தரத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட அரசுகள் உதவ வேண்டும்.