‘எதில் ஆர்வமோ அதைத்தான் படிக்க வேண்டும்’ | Kalvimalar - News

‘எதில் ஆர்வமோ அதைத்தான் படிக்க வேண்டும்’

எழுத்தின் அளவு :

எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி தலைவர் துரைசாமி அளித்த பேட்டி:

மாணவர்கள் படிப்பினை தேர்வு செய்யும்பொழுது தெளிவான பார்வையுடனும் அதிக அக்கறையுடனும் தேர்ந்தெடுக்க வேண்டும். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சொன்னார்கள், அருகில் இருப்பவர்கள் கூறினார்கள் என எந்த ஒரு படிப்பையும் தேர்ந்தெடுக்கக்கூடாது.

நமக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் சாதிக்கலாம் என்பதனை தெரிந்து பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் தனிப்பட்ட ஆர்வமே சிறந்த படிப்பை தேர்வு செய்வதற்கு உதவும். நமக்கு எது வருமோ, எதில் ஆர்வமோ அதைத்தான் படிக்க வேண்டும்.

தற்போதைய பாடத்திட்டங்களுக்கும், தொழிலக தேவைகளுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. பாடத்திட்டங்களில் நடைமுறைக்கு தகுந்தவாறான மாற்றங்கள் தேவை. மாணவர்களுக்கு 50 விழுக்காடு பாடத்திட்டங்களும், 50 விழுக்காடு பாடத்திட்டங்களைக் கடந்த திறன் சார்ந்த அறிவும் தேவைப்படுகிறது.

படிக்கும்பொழுதே கல்வி அறிவுடன் தொழில் பயிற்சியும் மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. தொழிற்பயிற்சியின் மூலம் தொழில்துறையின் தேவைகளை அறிந்துகொள்வது எளிதாகிறது. மேலும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்தான் நாடு வளரும். கல்லூரிகள் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பொறியியல் மட்டுமே முக்கியமானது அல்ல. கலை அறிவியல் படிப்புகளும் முக்கியமானதுதான். இன்றைய சூழ்நிலையில் எது படித்தாலும் இளநிலை படித்தால் மட்டும் போதாது, முதுநிலையும் படிக்க வேண்டும். மாணவர்கள் கல்வியோடு மொழித்திறனையும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவுத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us