1986ல் முதன்முதலில் சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையை நிறுவினேன். அதன்பிறகு பல இடங்களில், தொழில் நல்ல வளர்ச்சி அடைந்ததால், சமுதாயத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று நோக்கில் கல்வி ஸ்தாபனத்தை நிறுவ முடிவெடுத்தேன். அதுவும் சத்தியமங்கலத்திலேயே அமைக்க விரும்பினேன்!
உலகிற்கு விவசாயம், மருத்துவம் என அனைத்து துறைகளுக்கும் தேவையான உபகரணங்களை தயாரித்து தருவது இன்ஜினியரிங் தான். இந்த எண்ணங்களில் 1996ல், உருவானதுதான் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். இக்கல்வி நிறுவனமும் சிறப்பான வளர்ச்சி பெற்று, இங்கு படித்த மாணவர்கள் இந்தியாவில் மற்றுமின்றி பல்வேறு நாடுகளில் உயர்ந்த பணியில் இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது!
மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதால், ‘கோபம், பொறாமை போன்ற தீய குணங்கள் நீங்கி நல்ல மனதுடன், பொறியாளராக மட்டுமின்றி சிறந்த மனிதர்களாகவும் கல்லூரியை விட்டு வெளியேறுவதாக’ மாணவர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் சிலபஸின்படி மட்டுமே பாடம் நடத்துவது இன்றைய சூழலுக்கு போதுமானது அல்ல. பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு, மாணவர்கள் ‘இன்டேன்ஷிப்’ சென்று துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவும், பயிற்சியும் பெறுவதே எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.
தற்போது, இந்தியாவில் தேவைக்கும் அதிகமான அளவில் பொறியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச அளவில் இளைஞர்களை அதிகம் கொண்ட இந்தியா தான், வரும் காலத்தில் அனைத்து நாடுகளுக்கும் தேவையான, திறன் படைத்த மனித ஆற்றலை தரும் என்பதில் சந்தேகம் இல்லை!
அகில உலக அளவில் வேலை வாய்ப்பையும், அதிக வருமானத்தையும் பெற மாணவர்கள், 4 ஆண்டுகள் ஆர்வமுடன் படிக்க வேண்டும். தேவையான திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை அடிக்கடி மாற்ற விரும்புவதில்லை; இதை தொழில் நிறுவனங்கள் வரவேற்கின்றன.
நம் நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தொழில் துவங்குவதற்கு ஏதுவான சூழல் தற்போது நிலவுகிறது. எனவே, இன்றைய மாணவர்கள் சிறப்பாக படித்தார்கள் என்றால், கல்வி அறிவும், திறமையும், புதுப்புது ஐடியாக்களும் அதற்கு அடிப்படை தேவை!
இன்றைய மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக்கொண்டு, தான் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேசமயம், நமது நாட்டின் வளர்ச்சி மட்டுமின்றி, உலக சமுதாய வளர்ச்சியிலும் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற சமூக எண்ணத்தோடு செயல்பட வேண்டும்!
- எஸ்.வி.பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்.