உலகின் பல்வேறு நாடுகளில் உயர்கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் குடியேற்றம் ஆகிய பிரதான காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆங்கில மொழிப்புலமையை பரிசோதிக்கும் தேர்வு தான் ஐ.இ.எல்.டி.எஸ்., எனும் ‘தி இண்டர்நேஷனல் இங்கிலீஸ் டெஸ்டிங் சிஸ்டம்’!
முக்கியத்துவம்:
பிரிட்டிஷ் கவுன்சில், ஐ.டி.பி., ஐ.இ.எல்.டி.எஸ்., - ஆஸ்திரேலியா மற்றும் கேம்ப்ரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலிஷ் ஆகிய அமைப்புகள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. ஆங்கிலம் பேசும் நாடுகளில் உயர்கல்விக்காக செல்லவும், வேலை வாய்ப்பை பெறவும் இத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
உலகளவில் 379 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் விளங்கும் நிலையில், இது மூன்றாவது இடத்தை பெறுகிறது. சர்வதேச அளவில், 11 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள், பள்ளிகள் மற்றும் குடியேற்ற அமைப்புகளால் இத்தேர்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் யு.கே., ஆகிய நாடுகளில் இத்தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. உலகளவில் இத்தேர்வை ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தேர்வு வகைகள்:
ஐ.இ.எல்.டி.எஸ்., அகடமிக் தேர்வு மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., ஜெனரல் தேர்வு என இரண்டு வகைகள் உள்ளன.
* உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., அகாடமிக் தேர்வை எழுத வேண்டும்.
* வெளிநாடுகளில் குடியேறுபவர்கள், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் தொழில் முறை பயிற்சிகளை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., ஜெனரல் தேர்வை எழுதலாம். இவை தவிர, ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் என சிறப்பு வகை தேர்வும் உண்டு.
பிரிவுகள்:
இந்த இரண்டு தேர்வுகளும், கவனித்தல், வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகிய முக்கிய பிரிவுகளைக் கொண்டிருக்கும். இவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பிரகாசமாகிறது. எழுத்து மற்றும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வை எழுதலாம்.
மதிப்பெண்கள் 0 - 9 புள்ளிகள் முறையில் வழங்கப்படும்.
தேர்வு கால அளவு: 3 மணி நேரம்.
விபரங்களுக்கு: www.ielts.org