நம்பிக்கையை ஏற்படுத்துவோம்! | Kalvimalar - News

நம்பிக்கையை ஏற்படுத்துவோம்!பிப்ரவரி 12,2022,12:36 IST

எழுத்தின் அளவு :

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தாக்கத்தால், ஆன்லைன் முறையில்தான் கல்வி போதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் அறிவுத்திறன் குறைந்திருப்பது உண்மைதான்!



பள்ளியில், சக மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும்போதும், எழுதும் போதும் அந்தக் குழந்தை பல்வேறு சூழலையும், அனுபவத்தையும் கிரகித்துக் கொள்கிறது. குறிப்பாக, வேகமாக வாசிக்கவும், எழுதவும் முடியும். வீட்டிலிருந்து படிக்கும் குழந்தையிடம் அதை நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. 



இந்த நிலையை போக்க, பள்ளிக்கு மீண்டும் மாணவர்களுக்கு திருப்புதல் மேற்கொள்ளப்படுகிறது. அதன் மூலம் அவர்களது கற்றல் அறிவை மீட்டெடுக்க முடியும். தற்போதுள்ள நிலையில் மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். அவர்களுக்கு எது தேவை என்பதை அறிந்து கொடுக்கும் போது அவர்கள் அதை விரைந்து கற்றுக் கொள்கின்றனர். 



இழந்த இரண்டு ஆண்டுகள் குறித்து பேசுவதை விட, அதை அடைவது எப்படி என்பது குறித்து யோசிக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை பெற்றோர் அவரவர் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்கையில், மாணவர்கள் நிச்சயம் சாதிப்பர். 



தேசிய கல்விக் கொள்கை



இன்றைய காலகட்டத்தில், மாநிலக் கல்வி, சி.பி.எஸ்.இ., கேம்பிரிட்ஜ் என ஏராளமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதில் பெற்றோருக்கு குழப்பம் இருந்து வருகிறது. சமச்சீர் கல்வித்திட்டம் மிகச்சிறந்த ஒன்று. அதன் பயன் தெரியாமல், பலரும் சி.பி.எஸ்.இ., கல்வி முறைக்கு மாறினர். அதேபோன்ற நிலை தான் தற்போது தேசிய கல்விக் கொள்கையில் ஏற்பட்டுள்ளது.



தேசியக் கல்விக் கொள்கையில், சர்வதேச அளவிலான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில், கல்வி முறை சர்வதேச தரத்துக்கு மாற்றப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் எந்த நாட்டு கல்வி முறையையும் அறிந்து கொள்ள முடியும். அனைத்து மாணவர்களும் சர்வதேச தரக்கல்வியை கற்க முடியும். 




டிஜிட்டல் மயம் 



டிஜிட்டல் முறையிலான கல்வியுடன் இணைந்து செயல்பட வேண்டியது, காலத்தின் கட்டாயமாகி விட்டது. ஒவ்வொரு பெற்றோரும் டிஜிட்டல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னேற்றப்பாதையில், கொண்டு செல்ல முடியும். குழந்தைகளை நல்வழியில் கொண்டு செல்ல இது முக்கியம். 



திணிக்கக் கூடாது




வேகமான உலகில் நாம் பயணிக்கிறோம். எல்லாப் பெற்றோருமே, தங்களால் சாதிக்க முடியாததை தங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இது தவறு. இன்று, கண்ணுக்கு தெரியாத பல துறைகள் உள்ளன. அவற்றில் வெற்றி பெறுவதும் எளிது. அவற்றை மறந்து கண்ணுக்கு தெரிந்த ஒரே விஷயத்தின் பின் ஓடுகிறோம். மெதுவாக சென்றாலும், நிலைத்து நிற்கக் கூடிய வெற்றியை பெறுவதற்கான வழிகளை தேட வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் திறனை கண்டறிந்து அதில் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். 



-மணிமேகலை மோகன்தாஸ், தாளாளர், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள், கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us