முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு, காமன் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட் எனும் சிமேட்.
இத்தேர்வை எழுதுவதன் வாயிலாக, நாடு முழுவதிலும் உள்ள ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான தகுதியை பெறலாம். நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியால் நடத்தப்படும் இதேர்வு முற்றிலும் கணினி வழியில் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.
தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு எழுத வயது வரம்பு ஏதும் இல்லை.
கேள்வி முறைகள்: குவாண்டிடேட்டிவ் டெக்னிக்ஸ், லாஜிக்கல் ரீசனிங், லேங்குவேஜ் காம்ப்ரிகென்ஷன், ஜெனரல் அவேர்னஸ், இன்னோவேஷன் அண்டு ஆன்டர்பிரனர்ஷிப் ஆகிய 5 பகுதிகளில் இருந்து பகுதிக்கு தலா 20 கேள்விகள் வீதம் மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும். கேள்விகள் ஆங்கில மொழியில் மட்டுமே கேட்கப்படும்.
தேர்வு மையங்கள்: நாடுமுழுவதும் முக்கியமான அனைத்து நகரங்களிலும் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம்.
தேர்வு நேரம்: 3 மணிநேரம்
விபரங்களுக்கு: https://cmat.nta.nic.in/