"கடின உழைப்பு, தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் ஒழுக்க கட்டுப்பாடு ஆகியவற்றுடன் படித்தால், நிச்சயமாக சாதிக்க முடியும்" என, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த, மாணவி நிவேதிதா கூறினார்.
சேலையூர் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி, நிவேதிதா 1,187 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். தமிழ் 198, ஆங்கிலம் 192, இயற்பியல் 197, வேதியியல் 200, கணிணி அறிவியல் 200, கணிதம் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நிவேதிதாவின் பெற்றோர் சுவாமிநாதன் - சாய்லட்சுமி. சுவாமிநாதன் சிவில் இன்ஜினியர். சாய்லட்சுமி கனரா வங்கி ஊழியர். மாணவி நிவேதிதா கூறியதாவது:
"தினசரி காலையில் 4:00 முதல் 7:00 மணி வரையிலும், மாலையில், 6:15 முதல் 10:00 மணி வரையிலும் படிப்பேன். தேர்வு நேரத்தில் கூடுதலாக படிப்பேன். எனது வெற்றிக்கு அம்மாவின் பங்கு அதிகம். குடும்பத்தில் உள்ள யாரும், என்னை தொந்தரவு செய்யவில்லை. இரவில் உணவு அருந்தும்போது மட்டுமே, சிறிது நேரம் "டிவி" பார்ப்பேன். அதுவும் இந்தி நாடக்தை மட்டும் பார்ப்பேன்.
டியூஷன் போகவில்லை. இன்ஜினியரிங்கில் இ.சி.இ., படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். கடின உழைப்பு, தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் ஒழுக்க கட்டுப்பாடு ஆகியவற்றுடன் படித்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். இவ்வாறு நிவேதிதா கூறினார்.
நிவேதிதாவின் தாய் சாய்லட்சுமி கூறியதாவது: நிவேதிதா காலையில் எழுந்திருக்கும் போது, நானும் உடன் எழுந்து படித்து முடிக்கும் வரை இருப்பேன். அதுமட்டுமின்றி, எந்த பாடம் படிக்கலாம் என்று யோசனை கூறுவேன்.
நிவேதிதா, 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இடம் பிடிப்பாள் என்று எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. இதனால், பிளஸ் 2 தேர்வில் கண்டிப்பாக சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படிக்க வைத்தோம். தற்போது, சந்தோஷமாக உள்ளது. இவ்வாறு சாய்லட்சுமி கூறினார்.