இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்புகள் ஏராளம்! | Kalvimalar - News

இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்புகள் ஏராளம்!மார்ச் 10,2022,11:53 IST

எழுத்தின் அளவு :

கொரோனா காலத்தில் ஆன்லைன் வழி கல்வி முக்கியத்துவம் பெற்றபோது அதற்கு தேவையான உபகரணங்களை எங்களது கல்லூரி பேராசிரியர்களே தயார்செய்தனர். மாணவர்களும் ஆன்லைன் வாயிலாகவே திறம்பட கல்வி கற்றும், புரொகிராமிங் செய்தும் திறன்களை மேம்படுத்திக்கொண்டனர். 



ஆன்லைன் வழி கல்வி



ஆன்லைன் வழியாகவே தொழில் துறையினர் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது கூடுதல் சிறப்பு. இவ்வாறு எந்த ஒரு சவாலான தருணத்தையும், சாதகமாக மாற்றும் திறன் இன்ஜினியரிங் கல்விக்கு உள்ளது. வழக்கம்போல் கல்லூரி செயல்படும் தற்போதும், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக சுயமாக கற்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்வது நல்லது. ஆன்லைன் வழிக் கல்வியையும் அனைத்து காலகட்டத்திலும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.



வேகமான வளர்ச்சி



ஐ.ஓ.டி., கிளவுட் டெக்னாலஜிஸ், ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ், மிசின் லேர்னிங், ஏ.ஆர்., வி.ஆர்., உட்பட பல நவீன தொழில்நுட்பங்களில் சிறந்த விளங்கும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்கள் புராஜெக்ட் செய்ய வேண்டும்.  ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலைக்கு சேரும் இன்ஜினியரிங் மாணவர்கள் இரண்டே ஆண்டுகளில் 16 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். இன்ஜினியரிங் தவிர மற்ற துறைகளில் இத்தகைய வளர்ச்சி வெகுக் குறைவாகவே அமைந்துள்ளது. 



மாணவர்கள் திறன் வளர்ப்பிற்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் டொமைனில் உரிய திறன்களை பெற தேவையான வசதிகளை கல்லூரி நிர்வாகம் செய்துதருவதோடு, மாணவர்களுக்கு ஊக்கமும் அளிக்க வேண்டும். மாணவர்களும் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொண்டு திறனை வளர்த்திக்கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறை மட்டுமின்றி வங்கி, காப்பீடு, சுற்றுலா, ஹோட்டல் என அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன.



கல்லூரியை தேர்வு செய்தல்



தொழில்நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்டர் ஆப் எக்ஸெலன்ஸ், சிறப்பான கல்வி கற்கும் சூழல், உரிய நுழைவுத்தேர்வு பயிற்சி மற்றும் ஆங்கில மொழிப்புலமை பயிற்சி ஆகியவற்றை மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் முறையாக வழங்க வேண்டும். 



உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தை மாணவர்களுக்கு முதலாம் ஆண்டிலேயே வழங்க வேண்டும். தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படுவதோடு, தேசிய அளவிலான ஏராளமான போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தேர்வு செய்வது நல்லது!


இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்புகள் ஏராளம்!



-சுதா மோகன்ராம், ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us