அனைத்தையும் கற்றுக்கொள்வதற்கான மிக பிரம்மாண்டமான வாய்ப்புகளை ஆன்லைன் இன்றைய மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவற்றில் ஒரு மாணவர் எவற்றை கற்றுகொள்கிறார் என்பதே பிரதான கேள்வியாக உள்ளது!
அனைத்தையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் கண்முன்னே குவிந்து கிடக்கும் சூழலே மாணவர்களை எதையும் கற்கவிடாமல் சோம்பேறித்தனத்தை வளர்த்துவிட்டதோ! என்ற அச்சம் எழுகிறது. உதாரணமாக, முன்பு வீடுகளில் இருக்கும் சில திரைப்படங்களுக்கான சி.டி.,க்களில் விரும்பியதை தேர்வு செய்வது எளிதாக இருந்தது.
ஆனால் இன்று ஒ.டி.டி.,க்களே நூற்றுக்கும் மேல் உள்ளன. அவற்றில் திரைப்படங்களுக்கான எண்ணிக்கை என்பது கணக்கில் அடங்காத நிலையில், எந்த திரைப்படத்தை பார்ப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அதைப்போல, இன்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளே, கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தை குறைத்துவிடுகிறது.
இத்தகைய சூழலில், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள, தனக்கு எவை சரியானது, தன்னால் எவை முடியும் என்ற தெளிவும், புரிதலும் மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், வாய்ப்புகளுக்கு ஏற்ப தனக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சூழலையும், விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு ஏற்படுத்துக்கொடுப்பதற்கே எங்கள் கல்வி நிறுவனங்களில் 'விஷன் 2025’ என்ற தலைப்பின் கீழ் பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
17 அம்சங்கள்
எஸ்.டி.ஜி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள்’ என்ற 17 அம்சங்களை நோக்கி எங்களது கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஒவ்வொருவரும் 'புராஜெக்ட்’ மேற்கொள்கின்றனர். எங்கள் முன்னாள் மாணவர்கள் ஏற்கனவே செய்த புராஜெக்ட்களையும் 17 அம்சங்களின் கீழ் கொண்டு வந்துவிட்டோம். மாணவர்களுக்கு சரியான வழிமுறையை காண்பிக்க வேண்டும் என்ற எங்களது தேடுதலுக்கு கொரோனா காலத்திலான ஊரடங்கு சரியான வழியை காண்பித்து விட்டது என்றே கூறலாம்.
ஏனெனில், சமூகத்திற்கு பயனுள்ள வகையிலான புராஜெக்ட்களை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற குறிக்கொளை மனப்பூர்வமாக உள்வாங்கி, செயல்வடிவத்தை உருவாக்கி, அவற்றை செயல்படுத்துவதற்கான நேரத்தை ஊரடங்கு காலமே எங்களுக்கு வழங்கியது.
சமூகத்திற்கான தீர்வு
இன்றைய சமூகம் ஏராளமான பிரச்னைகளால் சூழ்ந்துள்ளன. அவற்றில் சிலவற்றையாவது முறையாக புரிந்துகொண்டு, அவற்றிற்கு சரியான தீர்வு காண மாணவர்கள் முனைப்புகாட்ட வேண்டும். ஒரே பிரச்னைக்கு ஒவ்வொரு மாணவரும் அவரது சிந்தனைக்கும், கற்பனை திறனுக்கும் ஏற்ப ஒவ்வொருவிதமான தீர்வுகளை அளிப்பர். அவற்றில் எளிதான, சரியான தீர்வை புகுத்த வேண்டும். இதற்கு ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளையும், அவற்றின் அடிப்படைகளையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், மதிப்பெண்களுக்காக மட்டும் கல்வி கற்காமல், சமூகம் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும்போது மாணவர்களாலும் திறம்பட செயல்பட முடியும். எங்களது இந்த குறிக்கோள் நிச்சயம் வெற்றி பெறும்...2025க்குள் சிறந்த நிலையை அடைவோம் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
- சாய்பிரகாஷ் லியோமுத்து, சி.இ.ஓ., சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சென்னை.