கற்பித்தல் மட்டுமல்ல பொறியியல் கல்வி | Kalvimalar - News

கற்பித்தல் மட்டுமல்ல பொறியியல் கல்வி ஆகஸ்ட் 16,2022,13:28 IST

எழுத்தின் அளவு :

கடந்த 10 ஆண்டுகளாக இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மவுசு குறைந்தது போன்றும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் சரியான வேலை வாய்ப்புகளின்றி தவிப்பது போன்றும் சில மீடியாக்களின் பார்வையில் பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. 



மாறாக, கல்லூரி நிர்வாகத்தினர் என்ற முறையில், இன்ஜினியரிங் படித்தவர்கள் ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றத்தையும், தொடர் வளர்ச்சியை பெறுவதையுமே நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். அத்தகைய, ’டாப்’ 100 கல்லூரிகளை எடுத்துக்கொண்டீர்கள் என்றால், மாணவர் சேர்க்கையும் சரி, மாணவர்கள் படிக்கும்போதே வேலைவாய்ப்பும் சரி மிக சிறப்பாகவே உள்ளது. தரமுள்ள கல்லூரிகள் என்றுமே வளர்ச்சியை நோக்கியே நகர்கின்றன. 




திறன்கள் வளர்க்க உதவுங்கள்



அனைத்து துறைகளிலுமே சவால்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான திறன்களை, கல்லூரிகள் அந்த 4 ஆண்டுகளில் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, அனைத்து கல்லூரிகளிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரே பாடத்திட்டம், ஒரே பட்டம் வழங்கப்படலாம். ஆனால், திறன்களை வளர்க்கும் விதத்திலும், வாய்ப்புகளை வழங்குவதிலும், நவீன மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் கல்லூரிக்கு கல்லூரி மாறுபாடு உண்டு. 



கற்பித்தல் மட்டுமே பொறியியல் கல்வி இல்லை என்பதை கல்லூரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்களின் தேவையையும், விருப்பத்தையும் புரிந்துகொண்டு, தொடர் மாற்றத்திற்கு உட்படுத்தப்படுத்த வேண்டும். அனலிட்டிக்கல், கிரியேட்டிவ் திறன்களை வளர்க்கும் வகையிலான திறன்கள் இன்று அதிகம் தேவைப்படுகின்றன. அவற்றுடன், சாப்ட் ஸ்கில்ஸ், தொழில்நுட்ப திறன், ஆராய்ச்சி திறன், தலைமைப் பண்பு, பன்முக திறன்களை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை ஒவ்வொரு கல்லூரி நிறுவனமும் மேற்கொள்ள வேண்டும். 



வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்



மனதில் நினைப்பதை சரியாக பேசுவது என்பது சாதாரண நிகழ்வாக தோன்றலாம். ஆனால், வாயை திறந்து பேச, நினைப்பதை சரியாக வெளிப்படுத்த தடுமாறும் மாணவர்களை இன்று அதிகம் பார்க்க முடிகிறது. அத்தகைய மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் திறமையாக கருத்து பரிமாறும் நபர்களாக அவர்களை மெருகேற்ற முடியும். 



ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் திறமையான பேராசிரியர்கள் அவசியம். அதோடு, தொழில்நிறுவனங்களுடனான நல்லுறவு, நிபுணர்களுடனான கலந்துரையாடல், தேசிய அளவில் இன்டர்ன்ஷிப் ஆகிய வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அவற்றை உணர்ந்து, எங்கள் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்துவதால் தான் டாப் '100’ என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில் எங்களால் இடம் பெற முடிந்தது.



-அபெய் சங்கர், துணை தலைவர், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள், சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us