எந்த ஒரு நாடும் வளர்ந்த நாடாக உலக அரங்கில் வளம் வர ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளை பார்த்தோமேயானால், அவர்களது வளர்ச்சியில் ஆராய்ச்சிகளின் பிரதான பங்கை அறிய முடியும்.
அத்தகைய வளர்ந்த நாடுகளில், அதிக அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பும் குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, பல்கலைக்கழகங்கள் என்பவை பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் இடமாக மட்டுமே கருதப்படுகின்றன.
இந்தியாவும் வளர்ந்த நாடு என்ற பெருமையை அடைய, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் அதிகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இச்சூழலில், ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையிலும் ஆராய்ச்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதால், கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு பேராசிரியரும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., ஐ.சி.எம்.ஆர்., ஆகிய தலைசிறந்த நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்களோடு எங்கள் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொழில் நிறுவனத்திற்கும் பொறுப்பு
பாமர மக்கள் சந்திக்கும் சவால்களையும், அவர்களது உண்மையான வலியையும் உணர்ந்தால் மட்டுமே சரியான பிரச்சனைகளை முதலில் கண்டறிய முடியும். அதன்பிறகு, பிரச்சனைக்கு ஏற்ற முறையான தீர்வு காணும் வகையிலான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இதில், அரசாங்கத்திற்கு மட்டும் இன்றி தொழில் நிறுவனங்களுக்கும் முக்கிய பொறுப்பு உண்டு.
அரசாங்கத்தால், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு போதிய நிதியை வழங்க முடியாத சூழலில், தொழில்நிறுவனங்கள் உறுதுணையாக இருக்கலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 100 பில்லியன் டாலர் நிதி ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில், இந்தியாவில் 8 பில்லியன் டாலர் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஆகவே, பெரிய தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு பல்கலைக்கழகத்தை தத்தெடுத்து, ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு உதவலாம். ஒரு ஆராய்ச்சி வெற்றி பெரும்பட்சத்தில் கூட, பல பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக அதன் மதிப்பு உயரும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
வளர்ந்த நாட்டிற்கான மற்றொரு சாராம்சம் என்னவெனில், அதிகளவிலான தொழில்கள் உருவாக்கப்படுவது... நம் நாட்டில் சமீப காலமாக, ஸ்டார்ட்-அப், தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட்-அப்கள் உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நமது பிரதமரும் புதிய புதிய தொழில் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார்.
அதிக இளைஞர்களைக் கொண்ட நம் நாட்டில், லட்சக்கணக்கான தொழில்முனைவோர், லட்சக்கணக்கான திறன் படைத்தவர்களுக்கான தேவை உண்டு. இத்தகைய சூழலில், புத்தாக்க முயற்சிக்கும் தொழில் நிறுவனங்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்.
- பிரதீப் குமார் குப்தா, வேந்தர், சார்தா பல்கலைக்கழகம், நொய்டா, உத்திர பிரதேசம்.