தேர்வு பயத்திற்கு தீர்வு! | Kalvimalar - News

தேர்வு பயத்திற்கு தீர்வு!டிசம்பர் 25,2022,22:20 IST

எழுத்தின் அளவு :

கொரோனாவிற்கு முன்பு ஆன்லைன் கல்வி என்பது மிக அரிதானதாக இருந்தது. ஆன்லைன் வாயிலான 'மீட்டிங்’ என்பதே பெரிய தொழில் நிறுவனங்களுக்கான ஒன்றாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. ஆனால், கொரோனாவிற்கு பிறகு, எல்.கே.ஜி., படிக்கும் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவராலும் ஆன்லைன் வாயிலான பயிற்சி, கல்வி, கூட்டம் என பயன்படுத்தப்படுகிறது. 


ஆன்லைன் வாயிலாக படிப்புகளையும், பயிற்சிகளையும் வழங்காத கல்வி நிறுவனங்களே இல்லை எனும் அளவிற்கு இன்று பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி ஆன்லைன் வாயிலான கல்வி மிக பயனுள்ள ஒன்று என்பதனால் அல்ல; வேறு வழியில்லை என்பதாலேயே அது பயன்படுத்தப்படுகிறது.



ஆன்லைன் வாயிலாக படிப்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். பல்வேறு வேலை பளு, குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் அவர்களால் பயிற்சி மையங்களுக்கு நேரடியாக சென்று கல்வி கற்பது கடினமாக உள்ளதால் அவர்கள் ஆன்லைன் வாயிலான பயிற்சியை நாடுகின்றனர்.



போட்டியை எதிர்கொள்ளுங்கள்



பிற மாநில மாணவர்களை ஒப்பிடும்போது, வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் தமிழக மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே உள்ளது. வங்கி பணிகளுக்கான தேர்வுகள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் என்பதை மனதில் கொண்டு தமிழக மாணவர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.



சிவில் சர்வீசஸ் தேர்வு, ஐ.ஐ.டி.ஜே.இ.இ., தேர்வுகளிலும் தமிழக மாணவர்களை விட பிற மாநில மாணவர்கள் பிரகாசிக்கின்றனர். பிற மாநில மாணவர்கள் தினமும் 8 மணிநேரம் முழு கவனத்துடன் தேர்வுகளுக்கு தயாராகின்றனர். எனினும் சமீப காலமாக, தமிழக மாணவர்களும் சற்று முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.



அச்சம் தவிர்



அரசு பணி தேர்வு, வங்கி பணி, சிவில் சர்வீசஸ் தேர்வு, தகவல் தொழில்நுட்ப பணிக்கான தேர்வு என பல்வேறு தேர்வுகளுக்கும் தனித்தனியாகத்தான் பயிற்சி பெறவேண்டுமா? ஆம், என்றால் கல்லூரி படிப்பு எதற்காக என்ற சந்தேகமும் எழுகிறது. இதற்கு பதில் காணும் முயற்சியாக, ‘நான் முதல்வன்’ திட்டம் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.



பல்வேறு போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டிய சூழல் இன்று நிலவும் நிலையில், தேர்வு என்றாலே அனைத்துதரப்பினருக்கும் ஒருவித பயம் தோன்றுகிறது. இரண்டாம் வகுப்பு தேர்வு மாணவருக்கும் பயம் இருக்கும். ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுபவருக்கும் பயம் இருக்கும். இத்தகைய தேர்வு பயத்தை போக்க, அடிக்கடி தேர்வு எழுதி, எழுதி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர் பயிற்சி எடுத்தால் நிச்சயமாக தேர்வு பயம் நம்மை விட்டு அகலும். 



-கல்பாத்தி எஸ். சுரேஷ், தலைவர், வெராண்டா லேர்னிங்.





Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us