ஜே.இ.இ.,-2023 அறிவிப்புகள் | Kalvimalar - News

ஜே.இ.இ.,-2023 அறிவிப்புகள்டிசம்பர் 29,2022,14:33 IST

எழுத்தின் அளவு :

பொறியியல் படிப்புகளுக்கான தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வான ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் குறித்த முக்கிய அறிவிப்புகளை இத்தேர்வை நடத்தும் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.




அறிமுகம்:


ஜே.இ.இ., தேர்வு மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். மெயின் தேர்வு அடிப்படையில் நாட்டிலுள்ள என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ., சி.எப்.டி.ஐ., மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது.



இவற்றில், பி.இ., மற்றும் பி.டெக்., சேர்க்கைக்காக ஜே.இ.இ., மெயின் தேர்வில் தாள் ஒன்றும், பி.ஆர்க்., மற்றும் பி.பிளான்., படிப்புகளில் சேர்க்கைக்காக தாள் இரண்டும் நடத்தப்படுகிறது. ஜே.இ.இ., மெயின் என்பது ஜே.இ.இ., அட்வான்ஸ்டுக்கான தகுதித் தேர்வும் ஆகும். அட்வான்ஸ்டு தேர்வு ஐ.ஐ.டி.,களில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது. 



இரண்டு முறை:


ஜே.இ.இ., மெயின் - 2023 இரண்டு முறை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில், ஒரே முயற்சியில் மாணவர்களால் திறம்பட செயல்முடியாத நிலையில் மதிப்பெண்களை மேம்படுத்திக்கொள்ள இரண்டாவது வாய்ப்பை இது தரும். முதல் முயற்சியில், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அனுபவத்தை பெறுவதோடு, இரண்டாவது முறையாக எழுதும்போது முதல் தேர்வில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் மேம்படுத்திக்கொள்ள முடியும்.



மேலும், இது அடுத்த வாய்ப்பிற்காக ஒரு ஆண்டு காத்திருப்பதற்கான காலத்தையும் குறைக்கும். அதேநேரம், ஒரு மாணவர் இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டிய கட்டாயமில்லை. மாணவரின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு முறையும் தேர்வு எழுதினால் அவற்றில் எது சிறந்த மதிப்பெண்ணோ அதுவே என்.டி.ஏ., தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆகவே, இரண்டு தேர்வு மதிப்பெண் குறித்த தேவையற்ற கவலை வேண்டியதில்லை.



தேர்வு நாட்கள்:


ஜே.இ.இ., மெயின் - 2023 தாள் ஒன்று  2023ம் ஆண்டு ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாவது தேர்வு ஏப்ரல் 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படும் வாரியத் தேர்வுகளில், ஜே.இ.இ., மெயின் - 2023 குறுக்கிடாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பி.ஆர்க்., மற்றும் பி.பிளான்., படிப்புகளுக்கான நடத்தப்படும் தாள் 2ஏ மற்றும் தாள் 2பி தேர்வுகளும் ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில்  நடைபெறும்.



’சாய்ஸ்’ உண்டு:


பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு வாரியங்களின் முடிவைப் பூர்த்தி செய்ய, ஒவ்வொரு பாடத்திலும் ஒரு பிரிவில் ’சாய்ஸ்’ கேள்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், எழுத வேண்டிய மொத்த கேள்விகளின் எண்ணிக்கை இயற்பியல் - 25, வேதியியல் - 25, மற்றும் கணிதம் - 25 என ஒரே மாதிரியாக இருக்கும். 



விபரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/about-jeemain-2023/




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us