கல்லூரிகள் ஆராய்ச்சி நிலையங்களாகவும், திறன்களை வளர்க்கும் மையமாகவும் மாற்றும் காணும் தருணம் வந்துவிட்டது. கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் போதுதான் கல்வி கற்பித்தலும், கல்வி கற்றலும் முழுமை அடைகிறது.
டிஜிட்டல் கல்வி முறை
முன்பு தியரி பாடங்களை கற்பிக்கும் இடமாக வகுப்பறைகளும், செயல்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் இடமாக ஆய்வகங்களும் இருந்தன. கொரோனா காலத்திற்கு பிறகு, ஆன்லைன் வழி கல்வி பரவலாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு, குறிப்பாக இன்ஜினியரிங் கல்வி சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கல்வி கற்பிக்கும் முறை, பாடத்திட்டம் மட்டுமின்றி மதிப்பீட்டு முறையிலும் சீரிய மாற்றம் நிகழ்ந்துவருகிறது. பாடத்திட்டங்கள் சார்ந்த அறிவு மட்டுமின்றி, திறன்கள் வளர்ப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்களில் ‘ஆக்டிவ் லேர்னிங் சென்டர்’ துவக்கப்பட வேண்டும்.
இன்றைய மாணவர்களும், டிஜிட்டல் வாயிலாக எந்த ஒரு பாடத்தையும் கற்கவே விரும்புகின்றனர். வகுப்பறையில் 5 மணிநேரம் மாணவர்களை ஒரே இடத்தில் அமர்த்தி, பாரம்பரிய முறையில் கல்வி கற்பிக்கும் சூழல் இனியும் தொடர வாய்ப்பு வெகு குறைவு. மாணவர்கள் கேள்விகேட்டு ஆசிரியர்கள் பதில் அளிக்கும் 'பிலிப்’ முறை வர வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே ‘தோழமை’ உறவு மேம்பட வேண்டும்.
தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்துவருவதுற்கு ஏற்ப ஆண்டுக்கு ஆண்டு பாடத்திட்டத்தையும் மாற்ற வேண்டிய சூழல் உள்ளது. கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மதிப்பு கூட்டு திறன்களை வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, உணவு முறை, ஆடை அணியும் முறை உட்பட அனைத்து அறிவையும் மாணவர்கள் பெரும் வகையில், தேவையான சூழலை ஒரு கல்வி நிறுவனம் வழங்க வேண்டும்.
கோர் இன்ஜினியரிங்
இன்று பல பொறியியல் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பயோடெக்னாலஜி, மெட்டலர்ஜிக்கல் போன்ற துறைகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலை தொடர்ந்தால், வரும் காலத்தில் கோர் இன்ஜினியரிங் துறைகளில் தேவையான இன்ஜினியர்கள் இல்லாத நிலை ஏற்படும். இத்தகைய நிலை மாற, எந்த ஒரு இன்ஜினியரிங் துறையிலும், தேவையான தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு 'ஆக்டிவ் லேர்னிங்’ வாயிலாக முழுமையான திறன்கள் வளர்க்கப்பட வேண்டும்.
கோர் இன்ஜினியரிங் மாணவர்கள் உலக அளவில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொண்டு அவற்றில் 'புராஜெக்ட்’ செய்ய வேண்டும். மேலும், பிசினஸ் ஸ்கில்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் உட்பட தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து திறன்களையும் வளர்க்கும் இடமாக வகுப்பறைகள் திகழ வேண்டிய காலம் இது.
-அகிலா முத்துராமலிங்கம், முதல்வர், கே.பி.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, கோவை