"திருப்புதல் தேர்வு நேரத்தில் நன்றாக படித்தால், பொது தேர்வில் நன்றாக எழுத முடியும்" என, சமஸ்கிருத பாடத்தில் மாநில அளவில், மூன்றாம் இடம் பிடித்த மாணவி மோனிகா கூறினார்.
கிழக்கு தாம்பரம், ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி மாணவி மோனிகா, சமஸ்கிருத பாடத்தில், 198 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் 191, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, பொருளியல் 200, வணிக கணிதம் 200 என, மொத்தம் 1,189 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, அந்த மாணவி கூறியதாவது: "சமஸ்கிருத பாடத்தில் மாநில அளவில், மூன்றாம் இடம் பிடிப்பேன் என்று யோசித்து கூட பார்க்கவில்லை. சி.ஏ., படிக்க வேண்டும் என்பது, எனது விருப்பம். பெற்றோர், ஆசிரியர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
வீட்டில் எனது உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். காலையில், 5:00 முதல் 7:00 மணி வரையிலும், மாலை, 5:00 முதல் 9:00 மணி வரையிலும் படிப்பேன். திருப்புதல் தேர்வு நேரத்திலேயே கவனம் செலுத்தினால், பொதுத் தேர்வில் நன்றாக எழுத முடியும்." இவ்வாறு, மாணவி மோனிகா கூறினார்.