"இரவு முழுக்க கண்விழித்துப் படித்ததால் மாநில அளவில் தொழிற்கல்வி பிரிவில், ஆட்டோமொபைல் பாடத்தில் முதலிடத்தை பிடிக்க முடிந்தது" என்று பொள்ளாச்சி மாணவன் விக்னேஷ் கூறினார்.
பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி மாணவரான இவர், பிளஸ் 2 தேர்வில், ஆட்டோ மொபைல் (தொழிற்கல்வி பிரிவு) பாடத்தில் 197 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்.
தமிழில் 182, ஆங்கிலம் 174, கணிதம் 156, ஆட்டோ மொபைல் 197, செய்முறை தேர்வு-1ல் 200, செய்முறை தேர்வு-2ல் 200ம் சேர்த்து மொத்தம் 1,109 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தனது சாதனை குறித்து விக்னேஷ் கூறுகையில், "என் தந்தை மணி. சலூன் கடை நடத்தி வருகிறார். மாநில அளவில் முதலிடத்தை பிடித்ததற்கு, எனது பெற்றோர் அளித்த ஊக்கம் தான் காரணம். காலை, மாலையில் நான் படித்த பாடத்தை ஒப்பிக்கச்சொல்லி கேட்பார்கள். அதை சரியான முறையில் செய்ததால் எனக்கு இந்த ரேங்க் கிடைத்துள்ளது.
"தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் பங்கேற்று என்னை தேர்வுக்கு தயார் படுத்தினேன்; இரவு நேரம் கண்விழித்து படித்ததால் நல்ல மதிப்பெண் பெற்றேன். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆக வேண்டும் என்பது என் ஆசை" என்றார்.