புதுப்புது நோய்கள் உலகை ஆக்கிரமித்து வரும் சூழலில், புதிய மருந்துகளை கண்டறிதல், வடிவமைத்தல், சோதனை செய்தல், அவற்றின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட அவசிய பணிகளை மேற்கொள்ளும் 'பார்மசி துறை’ தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது.
துறை வளர்ச்சி:
இந்தியாவில் மருந்து உற்பத்தித்துறை சராசரியாக ஆண்டிற்கு 3 சதவீதம் வளர்ச்சியை கண்டுவந்த வந்தது. 'கோவிட்’ பெருந்தொற்று காலத்தில் புதிய மருந்து தயாரிப்புகளின் வருகையால், இத்துறை சுமார் 15 சதவீத வளர்ச்சி பெற்று உச்சத்தை எட்டியது. இந்திய பொருளாதார ஆய்வு 2021ன்படி, அடுத்த பத்தாண்டுகளில் உள்நாட்டு சந்தை 3 மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய மருந்தக சந்தை மதிப்பு 2030ம் ஆண்டில் 1473.11 பில்லியன் டாலராக வளரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
டிப்ளமோ இன் பார்மசி - டி.பார்ம்.,
பேச்சுலர் ஆப் பார்மசி - பி.பார்ம்.,,
மாஸ்டர் ஆப் பார்மசி - எம்.பார்ம்.,
மாஸ்டர் ஆப் சயின்ஸ் - எம்.எஸ்.பார்ம்.,
மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.டெக்.பார்ம்.,
மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்- எம்.பி.ஏ.,(பார்மசூடிகல் மேனேஜ்மெண்ட்)
டாக்டர் ஆப் பார்மசி - பார்ம்.டி.,
என இத்துறையில் பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பாடப்பிரிவுகள்:
உடல்கூறியல், உடலியல் மற்றும் சுகாதாரக் கல்வி, மருந்தியல் பகுப்பாய்வு, கணித உயிரியல், மருந்தியல், மருந்து வேதியியல், மருந்து நுண்ணுயிரியல், அடிப்படை மின்னணுவியல் மற்றும் கணினி பயன்பாடுகள், பொதுவான நோய்களின் அறிகுறி கண்டறிதல், மருந்து மேலாண்மை ஆகியவை முக்கிய பாடங்களாக உள்ளன.
முக்கிய கல்வி நிறுவனங்கள்:
சென்னை மருத்துவக்கல்லூரி
கோவை மருத்துவ கல்லூரி
மதுரை மருத்துவ கல்லூரி
தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் - சென்னை
அண்ணாமலை பல்கலைக்கழகம் - சிதம்பரம்
என்.ஐ.பி.இ.ஆர்., கல்வி நிறுவனங்கள்
பி.எம்.சி.ஆர்.ஐ., - பெங்களூரு
டெல்லி பல்கலைக்கழகம்
எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள்
வாய்ப்புகள்:
சமூக மருந்தாளர், மருத்துவமனை மருந்தாளர், மருந்து ஆய்வாளர், தரக் கட்டுப்பாடு அசோசியேட், மருத்துவ ஆராய்ச்சி அசோசியேட், பார்முலேஷன் டெவலப்மெண்ட் அசோசியேட், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரதிநிதி, அறிவியல் பத்திரிகையாளர், விரிவுரையாளர் ஆகிய பணி வாய்ப்பை பெறலாம்.
சுகாதார மையங்கள், கல்வி நிறுவனங்கள், நோயியல் ஆய்வகங்கள், மருத்துவமனைகள், மருந்து கட்டுப்பாட்டு மையம் மத்திய, மாநில அரசு சுகாதாரத் துறைகள், மருந்துத் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஏஜென்சிகள் ஆகியவற்றில் வேலை வாய்ப்பை பெறலாம். பி.பார்ம் படிப்பிற்கு பிறகு, உரிய அனுமதி மற்றும் உரிமங்கள் பெற்று, ஒழுங்குமுறை சட்டங்களுக்கு உட்பட்டு, சுயமாக மருந்து வணிகத்தை துவங்கலாம்.