கும்பகோணம் மேலக்காவேரி ஈ.எஸ்.எம்.பி., நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீக். அவரது மனைவி சாரா அம்மாள். இவர்களது கடைசி மகள் ரோஷன் ஷபிகா.
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூலம் 2013 மார்ச் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., அரசுத்தேர்வினை எழுதி 500 மார்க்குக்கு 496 மார்க் பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும், தஞ்சை வருவாய் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.
அவர் பெற்ற மதிப்பெண் விபரம் வருமாறு: தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 ஆக கூடுதல் மார்க் 496.
சாதனை மாணவி ரோஷன் ஷபிகா கூறியதாவது: "என் வகுப்பில் நடத்தப்படும் பாடத்தை அன்றைய தினமே படித்துவிடுவேன். டியூஷன் வைத்துக்கொள்ளவில்லை. தினந்தோறும் இரவு 12.30 மணிவரை படிப்பேன். மாநிலத்திலேயே முதல் இடம் வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தேன். ஆனால், மூன்றாம் இடத்தைதான் பிடிக்க முடிந்தது.
என் அண்ணன் பி.சி.ஏ., படித்து விட்டு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். எனது அக்கா பி.டெக்., படித்துள்ளார். எனக்கு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் ஆவதே எனது விருப்பம் என்பதால் அதற்கு ஏற்ற பாடப்பிரிவை ப்ளஸ் 1ல் எடுத்து படிப்பேன்.
நான் இந்த அளவிற்கு மார்க் பெறுவதற்கு எனது பள்ளிக்கூட நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் எனது குடும்பத்தினர் காரணம்." இவ்வாறு மாணவி தெரிவித்தார்.