பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற உதவும் வகையில் மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது.
தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் மத்திய துறை திட்டத்தின் கீழ், பழங்குடியினர், சீர்மரபினர், நாடோடி இனத்தவர், பகுதியளவு நாடோடி இனத்தவர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் ஆகிய பிரிவினர் பயன்பெறலாம்.
படிப்புகள்:
இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு துறையிலும் உயர்நிலை படிப்புகளை மேற்கொள்ளலாம்.
உதவித்தொகை எண்ணிக்கை:
எஸ்.டி., பிரிவினர் - 115, சீர்மரபினர், நாடோடி இனத்தவர், பகுதியளவு நாடோடி இனத்தவர் - 6, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் - 4 என மொத்தம் 125 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இவற்றில், ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. போதுமான மாணவிகள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பயன்படுத்தப்படாத இடங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.
தகுதிகள்:
உதவித்தொகைக்கு தகுதி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது உரிய தகுதித் தேர்வில் சமமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்புகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பும், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பும் நிறைவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஏப்ரல் முதல் தேதியின்படி, 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
வருமான வரம்பு:
அனைத்து வகைகளிலும் ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நிதி உதவி விபரம்:
எந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனமாக இருந்தாலும், தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம், விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது. இவைதவிர, நாடுகளுக்கு ஏற்ப இதர செலவினங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: www.nosmsje.gov.in