ஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன? | Kalvimalar - News

ஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன?

எழுத்தின் அளவு :

சமூக தளத்திலும், பணி தளத்திலும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பேசி அறிமுகமாவதென்பது பலருக்கும் ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஆனால், ஒருவருடன் பேசிப் பழகுதல் என்பது சரியான முறையில் நடைபெற்றால், பழகுதல் என்பது மிகவும் எளிது.

அலுவலகத்தில் பழகுதல்

ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும்போது, பிறரின் பெயரை சத்தமாகக் கூறிக்கொண்டிருத்தல், தேவையின்றி சத்தம் போடுதல், இங்கேயும் அங்கேயும் காரணமின்றி உலவித் திரிதல், ஒருவரிடம் தேவையற்ற, தனிப்பட்ட முறையிலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருத்தல் போன்றவை, நிச்சயம் வேண்டாத செயல்கள். இதுபோன்ற செயல்கள், உங்களின் பணிக்கே உலைவைக்கக் கூடியவை.

எப்போதுமே, பணிபுரியும் இடத்தில் புரபஷனலாக நடந்துகொள்ளுங்கள். பணியின்போது, பர்சனல் விஷயங்களை தவிர்த்து, பணிக் குறித்த விஷயங்களை மட்டுமே பேசுங்கள். சக ஊழியர், தேவையில்லாமல் உங்களிடம் பேசினாலும், அதை நாசுக்காக தவிர்த்து விடுங்கள்.

பொதுவாக, உடன் பணி செய்வோருடன்(colleagues) பேசிப் பழகுவதற்கு, உணவு நேரத்தையோ அல்லது டீ அருந்தும் நேரத்தையோ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் கடந்தகால பணி அனுபவங்கள், பொழுதுபோக்குகள், உங்களது சக ஊழியர்கள், தங்களது பணியினை எவ்வாறு விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பணி நிலை ஆகியவைப் பற்றி உரையாடலாம்.

பணி தவிர்த்த வேறு வெளி விஷயங்களைப் பேசும்போது, தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல், விளையாட்டு, புதிய தொழில்முனையும் வாய்ப்புகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகள் உகந்தவை. தேவையில்லாமல் குடும்ப விஷயங்களைப் பேசுவது, உறவுச் சிக்கல்கள் குறித்து பேசுவது மற்றும் இதர ஊழியர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கார்ப்பரேட் உலகில், மிகச்சரியான மற்றும் நுட்பமான பேசும் திறன் மிகவும் முக்கியம். நமது பேச்சில் சிறு தவறுகளை செய்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கலாம்.

கல்லூரியில் நமது வாழ்க்கை

ஒருவர், தான் படிக்கும் கல்லூரியில், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதென்பது, ஒருவகையில் கடினம் மற்றும் ஒருவகையில் எளிது. ஆனால், பெரும்பாலானோருக்கு, எளிதில் பிறரிடம் பழகுவதென்பது, ஒரு கஷ்டமான காரியமாகவே உள்ளது. ஆனால், அந்த கடினத்தை, நாம் விரைவில் எளிதாக்கலாம். உங்களுடன், பள்ளிப் பருவத்திலிருந்தே படித்து அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் அல்லது ஊரில் வசித்த நண்பர் யாரேனும், உங்களது கல்லூரியில் சேர்ந்திருந்தால், புதிய சூழலுக்கு பழகிக்கொள்ள அவர் உதவலாம்.

புதிய மாணவர்களுக்கான party மற்றும் அவர்களுக்கான வாரஇறுதி விழா போன்ற நிகழ்வுகளிலும், கல்லூரியில் நடக்கும் வேறுபல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதன் மூலமாக, உங்களது வளாகத்தில், உங்களுடன் இருக்கும் பிற நண்பர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற சூழல்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே, கல்லூரி வளாகத்தில், உங்களுக்கென சிறப்பான நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் நண்பர் ஒவ்வொருவருடனும், தேவையான நேரத்தை செலவழியுங்கள். புராஜெக்ட்டை ஒன்றாக அமர்ந்து செய்தல் மற்றும் வெளியில் உணவருந்த செல்லுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக, நட்பு வட்டத்தை பலப்படுத்தலாம்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையில்லாமல் தலையிடுவது மற்றும் எப்போது பார்த்தாலும் அவரின் அருகிலேயோ அல்லது தேவையில்லாமலோ பேசிக்கொண்டேயிருந்து, சலிப்படைய வைத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

உங்கள் நடவடிக்கைகள், இருவருக்குமே பாதகம் விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும். சிறிய உரையாடல் எனும் கலையை, சற்று நேரம் எடுத்தே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. புன்னகை ஒன்றுதான் உடனடி மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.

உங்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, எத்தனை பேருடன் நீங்களாக சென்று பேச முடியுமோ, அத்தனை பேருடனும் பேசலாம். ஏனெனில், உங்களைப் போலவே, பலரும், தானாக முன்வந்து பேசுவதற்கு தயக்கத்துடனேயே இருப்பார்கள். எனவே, நாமாக முன்வந்து பேசுதல் என்பது, பல நேரங்களில் நன்மை பயக்கும்.

அதேசமயம், ஒருவரிடம் பழகியவுடனேயே, மிகச்சில நாட்களிலேயே, அவரை உற்ற நண்பன்(best friend) என்று கூறிக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாத வேலை. அனைவருமே உற்ற நண்பர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரளவு நல்ல நண்பர்களாக இருந்தாலே பெரிய விஷயம்.

சமூகத்தில் பழகுதல்

நாம், நமது சமூகத்துடன் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்து, நமது தனித்தன்மை முடிவு செய்யப்படுகிறது. நேர்மறை எண்ணம் கொண்ட, பிறரிடம் எளிதாக பழகத்தக்க மற்றும் சந்தோஷமான மனிதர்களை, இந்த சமூகம் எப்போதுமே விரும்பும்.

பொதுவாக, நமது சிந்தனையுடன் ஒத்த சிந்தனையுள்ள நபர்களுடன், நாம் பிறரைவிட அதிகம் பேசுவோம். பிறருடன் பேசும்போது, உங்களின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல, உங்களின் உடல் மொழியிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தகவல்தொடர்பில், 60% முதல் 80% வரையிலானவை, வார்த்தைகளற்றவை என்றே உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பாகவே, தங்களின்பால் கவனத்தை ஈர்க்கக்கூடிய நபர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். அதுபோன்ற நபர்கள், ஒருவார்த்தைக்கூட பேசாமலேயே, தங்களின் செய்தியை பிறருக்கு தெரிவித்து விடுவார்கள்.

நாம், வாயைத் திறந்து வார்த்தைகளை வெளிப்படுத்தும் முன்னதாகவே, நாம் எந்த வார்த்தைகளை, எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருப்போம். சிறப்பான தகவல்தொடர்புக்கு, ஒரு மொழியுடன் நல்ல அறிமுகம் இருப்பதும் முக்கியம்.

ஒரு தனிமனிதரைப் பற்றியோ அல்லது ஒரு சமூகத்தைப் பற்றியோ, மோசமான எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிப்போரையோ அல்லது தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்போரையோ, பொதுவாகவே, இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இதன் அர்த்தம், நீங்கள் எதையுமே விமர்சிக்கவோ அல்லது உங்களின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது என்பதல்ல. விமர்சிக்கும் விதம்தான் இங்கே கவனிக்கத்தக்கது.

(சமூகத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு சரியானதாகக்கூட இருக்கலாம். ஏனெனில், பொதுவாக, ஒரு சமூகத்தில், சரியானவை 20% இருந்தால், தவறானவை 80% இருக்கின்றன. ஆனால், என்ன செய்வது? எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே?) உங்களின் விமர்சனமோ அல்லது சொந்தக் கருத்தோ, ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒரு தனிப்பட்ட நபரை காயப்படுத்துவதாக இருந்தால், நீங்கள் விமர்சனம் செய்யாமலும், கருத்து சொல்லாமலும் இருப்பதே நல்லது.

வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நட்பு வட்டம், கண்ணியமானதாயும், வாழ்வில் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கட்டும்.

வேறு சில ஆலோசனைகள்

நம்பிக்கையுடன் இருத்தல்: பேசும்போது தடுமாறியோ அல்லது தயங்கி தயங்கியோ பேசுவதானது, நீங்கள் போதுமான நம்பிக்கையுடன் இல்லை என்பதை வெளிக்காட்டும். ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுவிட்டு, நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை ஒருமுறை தெளிவாக யோசித்து, அதன்பிறகு, உங்களுடைய உலகிற்குள் பிரவேசியுங்கள்.

கொஞ்சம் மகிழ்ச்சி: பேசும்போது, சிறுசிறு நயமான நகைச்சுவைகள், உங்களின் உரையாடலை சுவையாக்குவதோடு, தனிப்படுத்தியும் காட்டும். நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த நபரை, முடிந்தளவு சிரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்ட முயற்சிக்கவும்.

தனிப்பட்ட நன்மைக்காக அல்ல: ஒரு நபருடன் பழகத் தொடங்குகையில், அவரால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பழகக்கூடாது. மாறாக, ஒரு உண்மையான நட்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

மென்மையாக இருக்கவும்: நீங்கள் சந்திக்கும் நபர்களிடம், முடிந்தளவு மென்மையானவராகவும், இனிமையானவராகவும் இருக்க முயலுங்கள். இதன்மூலம், நீங்கள் பலராலும் விரும்பத்தக்கவராகவும், பலரின் ஆதரவைப் பெற்றவராகவும் திகழ்வீர்கள். இதுமட்டுமின்றி, எளிதில் அணுகக்கூடிய நபராகவும் இருப்பீர்கள்.

நல்ல உடை: உங்களின் பழகும் மற்றும் பேசும் விதங்கள், உங்களின் மதிப்பு மற்றும் நட்பு வட்டத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்தாலும், உங்களின் உடைக்கும் கணிசமான பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம். எனவே, முடிந்தளவு நன்றாக உடையணியவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us