குழந்தைகளுக்கு கல்வி அறிவை வளர்ப்பதற்கு உதவி செய்யுங்கள். உள்கள் குழந்தை வேகமாக படிப்பவரா, கூர்மையான அறிவு திறன் கொண்டவரா, படிக்கும் போது பாடக் குறிப்பு எடுப்பவரா, தேர்வு எழுதி பார்ப்பவரா என்று கவனியுங்கள். பிள்ளைகள் எந்த மாறியான ஆர்வம் உடையவர்கள் என்று உற்று நோக்குங்கள்.
உங்கள் குழந்தை வாழ்வில் சிறந்து விளங்க கல்வி அறிவு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியே நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தன் குழந்தை முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைக்க முதல் படி கல்வியாக தான் இருக்க முடியும்.
முழுமையான கல்வி அறிவு பெற்றிருந்தால் மட்டும் சிறந்த புத்திசாலிகளாக ஆக முடியாது. பொது வாழ்கையில் ஈடுபடுவதற்கான சில வாழ்கை பாடத்தையும் கற்றிருப்பது அவசியமாகும். வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் வாழ்கை பாடத்தை கற்றிருப்பது மிகவும் அவசியமானதாகும்.
பேராசியர் ஒருவர் அவருக்கு நிகழ்ந்த ஒரு இனிய நிகழ்ச்சியை குழந்தைகளின் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்கின்றார்.
ஒரு நாள் பேராசிரியர் ஆற்றங்கரைக்கு சென்றிருந்த போது கரையை சுற்றி காட்டுவதற்கு படகோட்டி தேவைப்பட்டான். விசாரித்த போது படகு ஓட்டுனர் தான் ஆற்றங்கறையை சுற்றி காட்டுவதாக சொன்னார். கரையை சுற்றிப் பார்த்தபடி படகில் அமர்ந்து இயற்கை சூழலை ரசித்து வந்தார். போகும் வழியில் இலைகள் மிதந்து வந்தது. பேராசிரியர் படகோட்டியை பார்த்து தாவரவியல் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா? எனக் கேட்டார். படகோட்டி தெரியாது என்றார். பேராசிரியர் படகோட்டியை பார்த்து அது தெரியாமலேயே வாழ்கையின் கால் பங்கு வீணடித்து விட்டாய் என்றார்.
சிறிது நேரம் கழித்து தண்ணிரில் கல்லை எரிந்த பேராசிரியர் படகோட்டியை பார்த்து மீண்டும் புவியியல் என்றால் என்ன தெரியுமா? படகோட்டி தெரியாது என்று சொல்ல அது கூட தெரிந்து கொள்ளாமல் வாழ்கையின் பாதியை வீணடித்து விட்டாய் என்றார்.
படகோட்டி சோர்ந்த நிலையில் படகை ஓட்டி கொண்டிருந்தான். பேராசிரியரின் கண்களை உற்று நோக்கி அய்யா பேராசிரியரே தங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்க? தெரியாது என்று பதிலளித்தார் பேராசிரியர். அந்த படகோட்டி சிரித்துக் கொண்டு இது தெரியாமல் வாழ்கை முழுவதையும் வீணடித்து விட்டீர்களே என்றான் படகோட்டி.
இந்த கதையை சுமார் ஆயிரம் பெற்றோர்களுக்கு என் கருத்தரங்கில் கூறி இருப்பேன், இப்போது கூறுங்கள் உங்கள் குழந்தை படகோட்டியா இல்லை பேராசிரியரா?
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். பெற்றோர்களான நீங்கள் தான் அதை என்ன என்று கண்டறிந்து சரியான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும். கல்வி அறிவு மட்டுமே ஒருவரை சிறந்த அறிவாளியாக ஆக்க முடியாது. அனைத்து விதமான கலைகளையும் கற்றிருந்தால் மட்டுமே வாழ்கையை எதிர் கொள்ள இயலும்.