உங்கள் குழந்தை உங்களிடம் சின்ன சின்ன பொய்களை கூறுகிறதா? தான் செய்த தவறை மறைக்க முற்படுகிறதா? ஆம் என்றால் அவர்களது தவறுகளை கூறும் தைரியத்தை உருவாக்க வேண்டியது உங்கள் கடமையாகும். அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணவன், அவனது அம்மாவிடம், இன்னும் ஆசிரியர்கள் விடைத்தாளை தரவில்லை என்று பொய் சொல்லலாம். இது, அவனது தோல்வியை மறைக்கவும், அம்மாவின் திட்டுதலில் இருந்து சில காலம் தப்பித்துக் கொள்ளவும் செய்யும் செயலாகும். இதை பிறகு தெரிந்து கொள்ளும் ஒரு அம்மா, மறைத்ததற்கும், தேர்வில் தோல்வி அடைந்ததற்கும் சேர்த்து திட்டுவார்கள். இது தவறு. ஒரு குழந்தை தான் செய்த தவறை மறைக்காமல் பெற்றோரிடம் கூறும் வகையில் உங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள். எந்த தவறாக இருந்தாலும், அதற்காக அதிகம் திட்டாமல், தவறை சரி செய்யவும், மீண்டும் அந்த தவறை அவர்கள் செய்யாமலிருப்பதற்கான வழிமுறைகளையும் பெற்றோர் எடுத்துக் கூற வேண்டும். படிப்பு மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தான் செய்யும் தவறுகளை பெற்றோரிடம் உடனடியாக கூறுவதால் பிரச்சினையை உடனடியாக தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் கொண்டு வர வேண்டும். இதற்கு பெற்றோரின் நடவடிக்கையில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். எடுத்ததற்கெல்லாம் திட்டும் பெற்றோர், குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்கள் அந்த தவறை செய்யக் காரணம் என்ன? அது குறித்து அவர்கள் வருந்துகிறார்களா என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஆலாசனை வழங்கினால், நிச்சயம் உங்கள் குழந்தை செய்யும் தவறுகள் குறையும்.