அழகுக்கலை
சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் அழகுக்கலை படிக்கலாம். சருமப்பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு, சிகை அலங்காரம் போன்றவற்றில் தங்களது திறமையை காட்டலாம். அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்து அதில் வல்லுனராக சாதிக்கலாம். பெரும்பாலான அழகு நிலையங்கள் சொந்தமாக அழகு சாதன பொருட்களை தயாரித்து வாடிக்கையாளரிடம் விற்பனை செய்கின்றன.
வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவது இந்த தொழிலில் அவசியமானது. முதலில் பெரிய அழகு நிலையங்களில் வேலை செய்வது பின்னர் சுயமாக தொழில் தொடங்க உதவும். அழகுக்கலைக்கு உதவும் மின்சாதனப் பொருட்களை பயன்படுத்தும் முறையையும் தெரிந்து கொள்வது அவசியம். தோல், பொடுகு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும். தேவைப்பட்டால் டாக்டரிடமும் செல்லவும் பரிந்துரை செய்யலாம்.
முகத்துக்கு மேக்கப், பேஷியல், மசாஜ், விரல் நகங்களை அலங்கரிப்பது, தலைமுடிக்கு வர்ணம் தீட்டுவது போன்றவை அழகுக்கலை நிபுணரின் பணிகள். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் அழகுக்கலை டிப்ளமோ கோர்சாக தபால் வழியில் கற்பிக்கப்படுகிறது. இதில் செய்முறை பயிற்சியுடன் அழகுக்கலை கற்பிக்கப்படுகிறது. பெருகிவரும் அழகுநிலையங்கள், அழகுக்கலை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்கின்றன.