உலகப் பொருளாதார நெருக்கடி நிலவும் இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் நிதித் துறையை திறம்பட நிர்வகிக்க நிதி ஆலோசகர் களின் தேவை அதிகமாக உணரப்படுகிறது. பங்குச் சந்தையின் வீழ்ச்சி, நிதி வங்கிகளின் மோசமான நிதி நிலைமை, சர்வதேச நிதிச் சிக்கல் போன்ற கடுமையான பிரச்னைகளை அலசி, ஆய்வு செய்து எதிர்கால நிதித் துறைக்கான வழிகாட்டுதல்களைத் தருவதில் பினான்சியல் அனலிஸ்ட்கள் எனப்படும் நிதி ஆலோசகர்களின் பணி இன்றியமையாததாகிறது. சர்டிபைட் பினான்சியல் அனலிஸ்ட் என்பதன் சுருக்கமே சி.எப்.ஏ., எனப்படுகிறது. இது வகுப்பறை சார்ந்த கல்வி முறையாக இல்லாமல் தானாகவே படித்துப் பட்டம் பெறும் முறையிலான கல்வியாகும். சி.எப்.ஏ., துறையில் ஏற்கனவே நிதித் துறையில் உள்ளவர்களும் நிதி சார்ந்த பணியில் ஈடுபட விரும்புபவர்களும் இணையலாம். இதற்கு ஏற்கனவே பட்டம் முடித்திருப்பது அவசியம். சி.எப்.ஏ., முடிப்பவர்கள் செய்யக் கூடிய பணிகள் என்று இவற்றைக் கூறலாம். * நிறுவன அறிக்கைகள், இணைய தளம், ஆன்லைன் தகவல் போன்றவற்றிலிருந்து தகவல்களைப் பெற்று அவற்றை ஆய்வு செய்வது. * நிறுவனங்களுக்குத் தேவையான நிதி மாதிரிகளை உருவாக்குவது, பராமரிப்பது மற்றும் ஆய்வு செய்வது. * நிறுவனத்தின் செயல்பாட்டைப் பொறுத்த தொடர்ந்த மற்றும் குறிப்பிட்ட தருணங்களில் எடுக்கப்படும் அறிக்கைகளை உருவாக்குவது. * நிறுவனத்தின் உள்ளும் வெளியிலும் நிறுவனம் குறித்த தகவல்களை வெளியிடுவது. * உலகின் பல பகுதிகளிலுமுள்ள சக பணியாளர்களுடன் தொடர்பு கொள்வது, கருத்தரங்குகளில் பங்கு பெறுவது, புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை ஆய்வு செய்வது.