புதிய வாய்ப்புகளைக் காட்டும் ஆன்லைன் கற்பித்தல் முறை | Kalvimalar - News

புதிய வாய்ப்புகளைக் காட்டும் ஆன்லைன் கற்பித்தல் முறை

எழுத்தின் அளவு :

இந்தியக் கல்விமுறையைப் போன்று, சிறந்த கட்டமைப்பை பிரிட்டன் கல்விமுறை கொண்டிருக்கவில்லை. எனவேதான், அந்நாட்டில் ஆன்லைன் வழி கற்றலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரிட்டன் மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட இதர ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் இந்தமுறை பின்பற்றப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு, நிறுவனங்கள் பயிற்சியளித்து இந்தப் பணியில் ஈடுபடுத்துகின்றன. மேலும், ஆசிரியர்களாக இருப்பவர்களும் இந்த Online Tutoring பணியில் ஈடுபடுகின்றனர். இரவு 9மணி முதல் காலை 7 மணிவரை பணிபுரியும் இந்த Online Tutors, தங்களுக்கான சம்பளத்தை, ஒரு அமர்வுக்கு(Session) இவ்வளவு என்ற முறையில் பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த முறையில், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, எளிமையான முறையில் தங்களது பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Tutorvista மற்றும் Top Careers & You(TCY) Learning Solutions Pvt. Ltd என்ற 2 நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளுக்கு இந்தியாவிலிருந்து இயங்குகின்றன. அதேசமயத்தில், லண்டனைச் சேர்ந்த Bright spark Education என்ற நிறுவனம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து 100 கணித ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. இத்துறைக்கு, எதிர்காலத்தில் பெரிய வளர்ச்சி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையான கற்பித்தல் செயல்முறையையும், பாடத்திட்டத்தையும் கொண்டிருப்பதால், அதற்கேற்ப Online Tutors பயிற்சி பெறுகிறார்கள்.

இத்திட்டம் இயங்கும் முறை

ஆசிரியரும், மாணவரும் தங்களுக்கான கணினியில் அமர்ந்து கொள்வார்கள். பொதுவாக, மாணவர்களுக்கு அது பிற்பகல் நேரமாகவும், ஆசிரியர்களுக்கு இரவு நேரமாகவும் இருக்கும். Whiteboard தொழில்நுட்பத்தின் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது. கணிப்பொறி மற்றும் ப்ரொஜெக்டருடன், ஒரு ஊடாடும் வெண்பலகை(Interactive Whiteboard) இணைக்கப்பட்டிருக்கும்.

அந்த ப்ரொஜெக்டர், பேனா, விரல், தொடுஊசி(Stylus) உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு ஒரு பயன்பாட்டாளர் கட்டுப்படுத்தக்கூடிய பலகைப் பகுதியில், கணினியின் திரையை வடிவமைக்கிறது. இதன்மூல்ம், ஒரு டியூட்டரும், மாணவரும், தங்களுக்கான உரையாடலை தடையின்றி தொடர முடியும்.

இத்திட்டத்தில் ஒரு மாணவனை ஈடுபடுத்தும் முன்பாக, அவருக்கு முன் அளவீட்டு சோதனை(Pre-assessment Test) வைக்கப்பட்டு, அந்த மாணவனின் பகுப்பாய்வுத் திறன் சோதிக்கப்படும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு மாணவனின் திறன் அளவு கண்டறியப்படும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில், குழந்தை திறமையாக இருக்கும் பகுதியும், பலவீனமாக இருக்கும் பகுதியும் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப, பெற்றோர்களுடன் கலந்துரையாடி திட்டங்கள் வகுக்கப்படும்.

சில வகுப்புகளுக்குப் பிறகு, திறன் அளவீட்டு தேர்வுகள் வைக்கப்பட்டு, அதன்மூலம் கற்பித்தலில் என்னென்ன புதிய தேவைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்படும். மேலும், இதன்மூலம், குழந்தையின் நிலையை, பெற்றோருக்குத் தெரிவிப்பதற்கான அறிக்கையும் தயாரிக்கப்படும். மேலும், இறுதி அளவீட்டு தேர்வு மற்றும் இறுதி அறிக்கைப் போன்றவை இந்த செயல்பாட்டில் முக்கியமானவை.

இந்த தகவல்தொழில்நுட்ப யுகத்தில்  Online Tutoring போன்ற முறைகள் மக்களிடையே, அதுவும், முன்னேறிய மேலை நாடுகளில் பிரபலமாவது ஆச்சர்யமில்லைதான். மேலும், இந்தப் கல்வி பயிற்சி முறையானது, விஸ்தாரமான முறையில் பாடங்களை அணுக மாணவர்களுக்குப் பயன்படுகிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், முகத்துக்கு நேராக கற்பிக்கும் பழைய முறையே சிறந்தது என்றும், இந்த Online Tutoring முறை துணைநிலை அளவில் உதவுக்கூடியது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இத்துறையில் ஈடுபட்டிருக்கும் முக்கிய நிறுவனங்கள்

Tutorvista என்ற பெங்களூரை அடிப்படையாக கொண்ட நிறுவனம், இத்துறையில் கடந்த 2005ம் ஆண்டே தனது செயல்பாட்டை துவக்கிவிட்டது. இந்நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் மொத்தம் 2000 ஆசிரியர்களை பணியமர்த்தியுள்ளது. தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் அமர்வுகள்(sessions) இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

இதைத்தவிர, லண்டனை அடிப்படையாக கொண்ட Bright spark Education என்ற நிறுவனம் இத்துறையில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டு வருகிறது. மேலும், Top Careers & You(TCY) Learning Solutions Pvt. Ltd  என்ற இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமும், இத்துறையில் பெரியளவில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், கணிதப் பாடத்தைப் பொறுத்தளவில், அதன் ஆசிரியர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. சராசரி கணித அறிவைவிட, பல இந்தியர்கள் கூடுதலாக கணிதத் திறமையைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலும், மேற்கத்திய நாட்டு மாணவர்கள் கணிதத்தை கற்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் மற்றும் அவர்களுக்கு நெருக்கடியும் இல்லை. இந்தநிலை, Online Tutor-களுக்கு நல்ல செய்தி.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us