கோவை: கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 41 ஆயிரத்து 916 மாணவர்கள் எழுதவுள்ளனர். 157 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 26 முதல், ஏப்.,8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 469 மாணவர்கள், 15 ஆயிரத்து 711 மாணவிகள் என 31 ஆயிரத்து 180 பேரும், தனித்தேர்வர்களாக 917 மாணவர்கள், 412 மாணவிகள், திருநங்கை ஒருவர் என 1,330 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
அதேபோல, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஆயிரத்து 526 மாணவர்கள், 4 ஆயிரத்து 623 மாணவிகள் என 9 ஆயிரத்து 149 பேரும், தனித்தேர்வர்களாக 182 மாணவர்கள், 75 மாணவிகள் என, 257 பேரும் தேர்வு எழுதவுள்ளனர். இரு கல்வி மாவட்டங்களிலும் சேர்ந்து, மொத்தம் 41,916 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
பொதுத் தேர்வை முன்னிட்டு, முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான கருத்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், குறிப்பிட்ட மையத்தில், கடந்த ஆண்டு அறை கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்களை, மீண்டும் அதே மையத்தில் பணியமர்த்தக்கூடாது என்பன உட்பட, தேர்வு சார்ந்த பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.