ஆனைமலை: ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் காளியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, சரளப்பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், டெங்கு காய்ச்சல், அம்மை நோய் மற்றும் தொழுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசியதாவது:
கோடை காலத்தில், அம்மை நோய், உடல் சூட்டினால் வரும் நோய்கள், பெரும்பான்மையாக கவனக்குறைவால் மட்டுமே அதிகரிக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு உடலில் சிறு தடிப்பு மற்றும் அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிகள் தோறும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே அதிகளவில், குடிநீர் பருக அறிவுறுத்துதல், கோடைக்கால நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
சுகாதாரம் இல்லாததால் பெருமளவில், நோய் தொற்று ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு வீட்டிற்கு சென்ற குழந்தைகள், துாய்மையான நீரில், கை கால்களை கழுவுதல் வேண்டும். உடல் சூட்டினை அதிகரிக்கும் வகையிலான உணவுகளை கோடை காலத்தில் பெற்றோர் குழந்தைகளுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லத்துரை, சுகாதார ஆய்வாளர்கள் அருணாச்சலம், விஷ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.