சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்முடி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதைத் தொடர்ந்து பொன்முடிக்கு எம்.எல்.ஏ., பதவி வழங்கப்பட்டது. அவரை மீண்டும் அமைச்சராக்க கவர்னர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரித்த நீதிபதிகள் இன்றைக்குள் உரிய முடிவு எடுக்குமாறு கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இதனையடுத்து அமைச்சராக பொன்முடி பதவியேற்க கவர்னர் ரவி அழைப்பு விடுத்தார்.
இதன்படி மாலை 3:30 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி ஒரே காரில் வந்தார். பொன்முடிக்கு அமைச்சராக கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர் உதயநிதி, சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இலாகா
அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த இலாகாவை கவனித்து வந்த ராஜகண்ணப்பனுக்கு கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை ஒதுக்கப்பட்டது.