புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் அருகே கஞ்சா விற்ற ஏழு கல்லுாரி மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் விவகாரங்கள் துறை அலுவலகம் எதிரில் கஞ்சா விற்பதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சோதனையில் இறங்கினர். அங்கு போலீசாரை கண்டதும் ஏழு பேர் கெண்ட கும்பல் தப்பி ஓடியது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அவர்கள், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 515 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கஞ்சா விற்றது குயவர்பாளையம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஹரிகரன், 19; கண்ணையர் வீதி காமராஜர் மகன் மகாதேவன், 21; உப்பளம் கம்பன் நகர், தமிழ்தாய் வீதி முருகன் மகன் அகிலன், 20; சாரம் குயவர்பாளையம், சாத்தானி வீதி தெய்வநாயகம் மகன் சந்தோஷ்குமார், 25; தட்டாஞ்சாவடி திலகர் நகர், 4வது குறுக்கு வீதி செந்தில் மகன் குத்தாஸ் (எ) வேதமூர்த்தி, 26; லாஸ்பேட்டை மெயின்ரோடு, புதுப்பேட் சதிஷ்குமார் மகன் சுகன், 24; என தெரியவந்தது.
இவர்கள் ஏழு பேரும் அரசு மற்றும் தனியார் கல்லுாரி பயிலும் மாணவர்கள்.கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு ஆளான அவர்கள், பாக்கெட் செலவுக்கு பணம் இல்லாததால் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் கஞ்சா வாங்கி வந்து சக கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
ஏழு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.