திட்டக்குடி: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி, இளமங்கலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தன்,60; இவர், திட்டக்குடி அடுத்த குமாரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் வரும் மே 31ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் இவர், கடந்த 1999ம் ஆண்டு போலி சான்றிதழ் கொடுத்து இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் சென்றது. அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சித்தார்த்தனின் டி.டி.எட்., சான்றிதழ் போலி என்பது உறுதியானது.
அதனையொட்டி, விருத்தாசலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன், சித்தார்த்தனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.