சென்னை: பிளஸ் 2 கணித வினாத்தாளில், மொழி மாற்ற பிழை மற்றும் கணித குறியீடு மாற்றப்பட்டுள்ளதால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 கணிதத்தேர்வு இரு நாட்களுக்கு முன் நடந்தது. அதில், வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததால், சென்டம் என்ற, 100க்கு 100 மதிப்பெண் அதிகம் பேருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கணித தேர்வின் வினாத்தாளில், ஏழு மதிப்பெண்ணுக்கு பிழை இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கணித வினாத்தாளில், 2 மதிப்பெண் பிரிவில், 25ம் எண் கேள்வியில், ஆங்கில பிரிவில், மாஸ் பங்ஷன் என்ற கேள்வி இடம் பெற்றது. இதன் தமிழ் பிரிவில், நிறை சார்பு கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டிருக்க வேண்டும். மாறாக, நிகழ்தகவு அடர்த்தி சார்பு கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அதனால், மாணவர்கள் சிலர் குழப்பம் அடைந்து, சரியான பதில் எழுத முடியவில்லை. எனவே, இந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சித்தவர்களுக்கு, இரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
அதேபோல, 5 மதிப்பெண் பிரிவில், நேரிய சமன்பாடுகளின் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இதில், இடம் பெற்ற, நெகேஷன் என்ற எதிர்மறைக்கான குறியீடு, சரியானதாக இருந்தாலும், பாடப்புத்தகத்தில் அந்த குறியீடு இல்லை.
அதனால், மாணவர்களுக்கு அந்த குறியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த கேள்விக்கும் மாணவர்கள் பதில் எழுத முயற்சித்தால், ஐந்து மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.