புதுடில்லி: இந்தியாவின் நேரடி விற்பனைத் தொழில், கடந்த 2022 - 23ல், 12 சதவீதம் வளர்ச்சியடைந்து, 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக, ஐ.டி.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.டி.எஸ்.ஏ., எனப்படும் இந்திய நேரடி விற்பனை தொழில்துறை சங்கம் தெரிவித்திருப்பதாவது:
இந்திய நேரடி விற்பனைத் தொழில் துறையானது, கடந்த 2022 - 23ம் ஆண்டில், வருவாயாக 21,282 கோடி ரூபாயை எட்டியதன் வாயிலாக, 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது 2021 - 22ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2,252 கோடி ரூபாய் அதிகம்.
மொத்த விற்பனையில், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் 73.50 சதவீதம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்பு 11.30 சதவீதமாக உள்ளன. கடந்த 2019 - 20 முதல், 2022 - 23 வரையிலான நான்கு ஆண்டுகளில், நேரடி விற்பனை வணிகத்தின் சராசரி வளர்ச்சி 8.3 சதவீதமாக உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நேரடி விற்பனைத் துறையில், கடந்த 2021 - 22ம் ஆண்டில் 84 லட்சமாக இருந்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை, மதிப்பீட்டு காலத்தில், 86 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும், உலகளாவிய நேரடி விற்பனையில், கடந்த 2019ல் 15 இடத்தில் இருந்த இந்தியா, 2022ல் 11ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.