புதுடில்லி: டிஜிட்டல்மயமாக்கல் காரணமாக எழும் அபாயங்களிலிருந்து வாடிக்கையாளர்களை காக்க, வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அவசியம் என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார். நிதிதொழில்நுட்ப நிறுவனங்களின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேலும் தெரிவித்ததாவது:
பின்டெக் நிறுவனங்கள் பல்வேறு நன்மைகளை வழங்கி வந்தாலும், அதில் தவறான பயன்பாடு மற்றும் மோசடியின் அபாயம் அதிகமாக இருக்கிறது. அவை, நுகர்வோரை நிதி பாதிப்புகளுக்கு ஆளாக்கக் கூடும்.
இந்நிறுவனங்கள் போதுமான வெளிப்படைத்தன்மை இன்றி செயல்பட்டு வரும் காரணத்தினால், பிரச்னைகள் எழும்பட்சத்தில், அவற்றை தீர்க்க அல்லது இழப்பீடு பெற வாடிக்கையாளர்கள் சிரமப்பட வாய்ப்புள்ளது. வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், மேம்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்த நுகர்வோர் விழிப்புணர்வு முயற்சிகள் வாயிலாக இந்த அபாயங்களை தீர்க்க வேண்டும்.
மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி பரிமாற்றங்களுக்கு, பல முனை அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் இருக்கும் போதிலும், வாடிக்கையாளர் அலட்சியம், சைபர் தாக்குதல் காரணமாக, முக்கிய தகவல்கள் திருடு போவது நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
இவற்றிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.