பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கும் போது, சமையல் அறை வசதியுள்ள தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு, &'பி.எம்., பூஷண்&' திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
கர்நாடகாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 4 வரை, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்க உள்ளது. மாணவ, மாணவியர் எந்த தொந்தரவும் இல்லாமல், தேர்வு எழுதும் நோக்கில் தேர்வு மையங்களில், &'பி.எம்., பூஷண்&' திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்க வேண்டும்.
சமையல் அறை வசதியுள்ள, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையங்களில், 1,167 அரசு பள்ளிகள், 884 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மதிய உணவு சாப்பிட விரும்பும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, உணவு தயாரித்து வழங்க வேண்டும்.
சமையல் தயாரிப்பதை, பரிமாறுவதை மேற்பார்வையிட, உடற்பயிற்சி ஆசிரியர்கள் அல்லது சமையல் ஊழியரை நியமிக்க வேண்டும். எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுக்ககூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.