சென்னை: மதுரை மருத்துவ கல்லுாரியில் அமைக்கப்படும் ஓட்டு எண்ணிக்கை மையத்தை, வேறு இடத்துக்கு மாற்ற தற்போது உத்தரவிட இயலாது என, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மதுரை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையமாக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாணவர் சங்க தலைவர் ராஜ்முகமது உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய &'முதல் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது.
மருத்துவ கல்லுாரியை ஓட்டு எண்ணிக்கை மையமாக மாற்றுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்; கல்லுாரி உடன் மருத்துவமனையும் இணைந்துள்ளதால், அதன் அன்றாட அலுவல்களும் பாதிக்கப்படும் என, மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், மதுரை மருத்துவ கல்லுாரியை ஓட்டு எண்ணிக்கை மையமாக, 1998 முதல் பயன்படுத்துகிறோம். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், இதை தேர்ந்தெடுத்தோம். கடைசி வாய்ப்பாகவே கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மருத்துவ கல்லுாரியின் ஒரு பகுதியை மட்டுமே ஓட்டு எண்ணிக்கை மையமாக பயன்படுத்துவதால், படிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஓட்டு எண்ணிக்கை மையத்தை மாற்ற உத்தரவிடுவது உகந்ததாக இருக்காது என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. தொழிற்கல்வி கல்லுாரிகளை ஓட்டு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்வதை தவிர்க்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்திய முதல் பெஞ்ச், மதுரையில் அரசு கட்டடங்கள் பல உள்ளதால், எதிர்காலத்தில் மருத்துவ கல்லுாரியை, தேர்தல் ஆணையம் தேர்வு செய்யாது என, எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.