திருபுவனை: மதகடிப்பட்டு அருகே கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் கலிதீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரி எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்துகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் கண்டமங்கலத்தை சேர்ந்த பரணி, 21; முத்துவேல் 20; மற்றும் சென்னையை சேர்ந்த ராகவேந்திரன், 21; என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெரியகாலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.