உடுமலை: அமராவதி நகர் உண்டு உறைவிடப்பள்ளியில், விளையாட்டு தளவாடங்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு அமைப்புகள் சார்பில், அரசுப்பள்ளிகளுக்கு அவ்வப்போது உதவிப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அமராவதி நகரில், மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.
அமராவதி நகரைச்சேர்ந்த கல்வியாளர் கருப்பண்ண சேகர், இப்பள்ளிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு தளவாடங்களை வழங்கியுள்ளார். சறுக்கல், ஊஞ்சல், சீசா உள்ளிட்ட தளவாடங்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பள்ளி மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளையாட்டு தளவாடங்களை வழங்கிய கல்வியாளருக்கு, பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.