திருப்பூர்: பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், 2024 ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் நிறைவடைய உள்ளது. இந்த பதவி காலத்தை ஆக., வரை நீட்டித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2022 ஆண்டு ஏப்., 23ம் தேதி கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஜூலை, 20 ம் தேதி வரையும், ஏப்ரல், 30ம் தேதி அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு ஜூலை, 27ம் தேதி வரையும், மே மாதம் ஏற்படுத்தப்பட்ட குழுவை, ஆக., 10 வரையும், ஜூலையில் துவக்கப்பட்ட குழுவை, ஆக., 17 வரையும் பதவி காலம் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் தரப்பில் இருந்து, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.