கோவை: உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து, விரும்பி படித்தால் சாதிக்கலாம் என ஜோகோ நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் சார்லஸ் காட்வின் தெரிவித்தார்.
வழிகாட்டி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
பிளஸ் 2 முடித்த பிறகு, நீங்கள் என்ன படிக்கலாம் என்பதை, மற்றவர்கள் தேர்வு செய்ய கூடாது. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான். பிடித்த துறையை தேர்வு செய்து விரும்பி படித்தால், வேலை கிடைப்பது உறுதி.
பெற்றோர் பிறருடன், உங்கள் குழந்தையை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு திறன்கள் இருக்கின்றன. அதை கண்டறிந்து வழிநடத்துவது தான், பெற்றோரின் முக்கிய கடமை.
நான் ஒன்பதாம் வகுப்பில், தோல்வியை சந்தித்தேன். குறைந்த மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்த பிறகு, என்ன படிப்பது என்றே தெரியாமல் திணறினேன். இப்போது, மிகப்பெரிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்க காரணம் என் அம்மா தான். என் விருப்பத்திற்கு படிக்க அனுமதித்தார். வாழ்வில் வெற்றி பெறுவேன் என நம்பினார்.
உங்கள் குழந்தைகளை முதலில் நம்புங்கள். வாழ்வில் வெற்றி பெற்ற அனைவரும், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அல்ல. ஒரு விஷயத்தை தனித்தன்மையோடு அணுகியவர்கள்.
பிரச்னையை அணுகுவது, வித்தியாசமாக சிந்திப்பது, தீர்வு காண்பது தான், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும், முக்கிய திறன்களாக உள்ளன. வெறும் மதிப்பெண்களை தாண்டி, இத்திறன்கள் இருந்தால், லட்சங்களில் சம்பாதிக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.